ஆஞ்சநேயருக்கு 5000 லிட்டர் பாலாபிஷேகம் தேவையா? மாற்று வழி இதோ!

விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கறையில் 90 அடி உயரத்தில் பிரம்மாண்டமான ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. அந்த வட்டாரத்தில் மிகவும் பிரபலம்.
வழக்கமான பூஜைகளோடு, சித்திரை ஒன்றாம் தேதி பிரம்மாண்டமாக விழா நடைபெறும். அன்று, பாலாபிஷேகம் செய்யப்படும். கொஞ்ச நஞ்சமல்ல…ஐந்தாயிரம் லிட்டர் பால்!
இன்றும் அதே போல அபிசேகம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த பல வருடங்களாகவே இப்படி பல்லாயிரக்கணக்கான லிட்டர் பாலில் அபிசேகம் செய்யப்படுகிறது.
தொட்டிகளில் பால், பம்ப் வைத்து குழாய் மூலம் இந்த அபிசேகம் நடக்கிறது.
அதே போல, நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது அல்லவா… அங்கும் இன்று 1,008 லிட்டர் பாலில் அபிஷேகம் நடைபெற்றது.
இங்கு மட்டுமல்ல பல கோயில்களில் இப்படி அபிசேகம் நடக்கிறது. பாலில் மட்டுமல்ல… தேன், பன்னீர், சீயக்காய், இளநீர் உள்ளிட்டவைகள் மூலமும் அபிசேகம் நடைபெறுகிறது.
உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா..
உலகளாவிய பசி குறியீடு அதிகமாக உள்ள 80 நாடுகளில் இந்தியா 67 வது இடத்தில் உள்ளது. அதாவது பசியுடன் திரியும், பசியுடன் தூங்கச் செல்லும் மனிதர்கள் இந்தியாவில்தான் அதிகம். இப்படி துயரப்படுபவர்களில் உலகில் நால்வருக்கு ஒருவர் இந்தியாவில்தான் இருக்கிறார்.
இந்த வறிய சூழலில், கடவுளின் பெயரால் பால், தேன் என உணவுப் பொருட்களை அபிசேகம் செய்வது சரிதானா என சிந்தக்க வேண்டும்.
அதற்காக ஒரேயடியாக அபிசேகம் செய்ய வேண்டாம் என சொல்லவில்லை. தண்ணீர் கொண்டு அபிசேகம் செய்யப்படுகிறதே.. அது போதாதா! கடவுளுக்கு எல்லாம் ஒன்றுதானே!
அல்லது குறைந்த அளவு பாலில் அபிசேகம் செய்யலாமே!
கோயிலுக்கு மொட்டை அடித்துக்கொள்வதாக வேண்டிக்கொள்ளும் பலர், கொஞ்சம் முடியை மட்டும் வெட்டிக்கொள்வது இ்லலையா… பூமுடி என்பார்களே!
தவிர எத்தனையே சம்பிரதாயங்களை நாம் மாற்றிக்கொண்டுவிட்டோமே!
கும்பகோணத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம் மிகப் பிரசித்தம். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நட்சத்திர நேரத்தில் அங்கு குளத்தில் நீராட வேண்டும் என்பதே சம்பிரதாயம்.
அங்கு விபத்து ஏற்பட்டு பல நூறு பேர் மாண்டார்கள். அதன் பிறகு, நாள் முழுதும் குளிக்கலாம் என காஞ்சி சங்கராச்சாரியார் கூறினார். அதுதான் இப்போது வரை நடக்கிறது.
கோயில்களில் ஒருவித பாசிடிவ் வைப்ரேசன் இருப்பதாக பக்தர்கள் பலர் சொல்வது உண்டு. யோசித்துப் பாருங்கள்.. அந்தக்கால இயற்கை முறையில் நாம் வாழவில்லை. எல்லா கோயில்களிலும் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.. கருவறை, பிரகாரம் என எல்லா இடத்திலும் மின் விளக்குகள், மின் விசிரிகள், ஏசிக்களும் உண்டு.. இப்படி கோயில் முழுக்க குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மின்சார ஒயர்களால் இயற்கையான வைப்ரேசன் பாதிக்காதா… அர்ச்சகர்கள் கிராப் வைத்துக்கொள்கிறார்களே…
“இவர் இவர்கள்தான் கோயிலுக்குள் வர வேண்டும்” என்கிற சம்பிரதாயமும் இருந்தது.. அதை எல்லாம் பகுத்தறிவாளர்கள் ஒழித்தார்கள்.. அதனால் என்ன பிரச்சினை வந்துவிட்டது?
இப்படி எத்தனையோ மாற்றங்களை ஏற்றுக்கொண்டோம். அது போல உணவுப் பொருட்களை அதிகமாக செலவிட்டு அபிசேகம் நடத்துவதைத் தவிர்க்கலாமே. சம்பிரதாயதுக்காக ஒரு லிட்டர் பாலில் அபிசேகம் நடத்தலாம்.
மீதிப் பணத்தை சரியாக செலவு செய்யும் நிறுவனங்கள் மூலம் ஏழைக் குழந்தைகள் உணவுக்கு கொடுக்கலாம். அல்லது மீதமுள்ள பாலை, இந்த கோடைக்காலத்தில் தயிராக்கி, நீர் மோராக லட்சம் பேருக்குக் கொடுக்கலாம்.
பக்தர்கள் சிந்திக்க வேண்டும்.
– டி.வி.சோமு