கறுப்பின வன்முறையை சுட்டி காட்டும் ’ட்ராப் சிட்டி’ பாடல்!!
கைபா ஃபில்ம்ஸ் தயாரிக்கும் ’ட்ராப் சிட்டி’ என்கிற படத்துக்கு, தயாரிப்பாளர், படைப்பாளி, தி ஏடிஜி அஸ்வின் கணேஷ் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல்களை சோனி மியூசிக்கின் தி ஆர்சர்ட் நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது. இந்தப் படத்தில், ‘பேரனாய்ட்’ அட்லான்டாவைச் சேர்ந்த ராப் இசைப் பாடகி சா-ராக், ஆஸ்கர் விருது வென்ற நடிகரர் க்யூபா குட்டிங்கின் சகோதரர் ஒமர் குட்டிங், இசையமைப்பாளர், பாடகர் ஜி.வி.பிரகாஷ் குமார் என மூன்று கலைஞர்கள் இணைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 6.30 நிமிடங்கள் ஒலிக்கும் பேரனாய்ட் பாடல், ட்ராப் சிட்டி படத்தின் முக்கியப் பாடலாக அமைந்துள்ளது. ட்ராப் சிட்டி திரைப்படத்தின் டீஸரும் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம், கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு எதிரான போலீஸ் அராஜகத்தை எடுத்துரைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக மேற்கத்திய பாடலில் தமிழில் வரிகள் அமைந்துள்ளன. ஜி.வி.பிரகாஷ்… கண்ணே கண்ணே.. எனப் பாடலில் கசிந்துருகும் போது அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்கிற வலியுறுத்தல், அவரது குரல் மூலம் வலுவாகப் பதிவாகிறது.
வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை உரக்கச் சொல்கிறது. பாடலின் மேற்கத்திய பின்புலத்துக்கு ஒமர் குட்டிங் உயிர் சேர்த்துள்ளார். சா-ராக் பாடலின் கருத்துருவுக்கு வலு சேர்த்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் உணர்வுப்பூர்வமான வரிகளால் உருகி பாடலோடு நம்மை அரவணைக்கிறார். ரிக்கி ப்ரூச்செல்லுடன் ஜி.வி.யின் வார்த்தைகளும் மனதை பிசைய வைக்கின்றன.
இந்தப் பாடல் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு அறைகூவல். கரோனா காலத்தில் ஏற்படுட்டுள்ள அச்சத்தை நீக்கி நம்பிக்கையை விதைக்க, அமைதியை நிலைநாட்ட எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கிறது என்கின்றனர்.