புதிய படத்தில் மீண்டும் வில்லனாக அவதாரம் எடுக்கும் சத்தியராஜ்..!

ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி.
மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடிக்க, ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் புரட்சித்தமிழன் சத்யராஜ். இதில் ஹைலைட்டான அம்சம் என்னவென்றால் இந்தப்படத்தின் மூலம் சத்யராஜ் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்கு திரும்பியுள்ளார் என்பதுதான்.
மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மோகன் டச்சு என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் படத்தின் ஒளிப்பதிவையும் அவரே கவனித்துள்ளார்.
தற்போது இந்தப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதனை நடிகர்கள் ஆக்சன் கிங் அர்ஜுன், சிபிராஜ், சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
இரண்டு நிமிடம் ஓடக்கூடிய வகையில் வெளியாகியுள்ள இந்த டீசரில் முதல் ஒரு நிமிடம் முழுவதும் அமைதிப்படை சத்யராஜின் பாணியிலான நையாண்டி வசனங்களாலும் அடுத்த ஒரு நிமிடம் அவரது வில்லத்தனமான கதாபாத்திர அறிமுக காட்சியாவும் அமைந்துள்ளது.
குறிப்பாக எண்பதுகளில் நாம் பார்த்து ரசித்த சத்யராஜின் வில்லத்தனமான நடிப்பையும் அவரது நக்கலான வசனங்களையும் இந்தப்படம் மீட்டெடுத்து கொண்டு வந்துள்ளது என்பதை இந்த உணர்த்தும் விதமாக இந்த டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.
“வழக்கமா நரிக்கூட்டத்தை வேட்டையாட சிங்கம் தான் வரும்.. ஆனா இப்போது இன்னொரு நரியே வந்திருக்கிறது”, “எனக்கு கட்சி ஆரம்பித்து ஜனங்களை ஏமாத்தவும் தெரியாது.. கட்சி ஆரம்பிக்க போறேன்னு சொல்லி ஜனங்களை ஏமாத்தவும் தெரியாது” என்கிற வசனங்கள் வரும் நாட்களில் பரபரப்பை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை.
சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் வசனங்களில் பங்களிப்பு செய்த கருந்தேள் ராஜேஷ் தான் இந்த படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்
125க்கும் மேற்பட்ட சூப்பர்ஹிட் பாடல்களை எழுதிய கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
விரைவில் ரிலீஸாகும் விதமாக இந்தப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.