`”மிர்ச்சி சிவா நல்லா ஏமாத்துவாரு!”: ‘ சூதுகவ்வும் 2’ விழாவில்  சந்தோஷ் நாராயணன்!

`”மிர்ச்சி சிவா நல்லா ஏமாத்துவாரு!”: ‘ சூதுகவ்வும் 2’ விழாவில்  சந்தோஷ் நாராயணன்!

சூதுகவ்வும் 2 படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெற்றது. மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சி.வி.குமார், எஸ்.தங்கராஜ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத் பாடல்களுக்கும் ஹரி எஸ்.ஆர் பின்னனி இசையும் இசையமைத்து உள்ளனர்.

2013ம் ஆண்டு நலன் குமாராசாமி இயக்கத்தில் சூதுகவ்வும் படத்தின் முதல் பாகம் வெளியானது. விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், ஷில்பா ஷெட்டி நடித்து வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பரவலாக பேசப்பட்டார்.

சூதுகவ்வும் 2 இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் சந்தோஷ். பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, சி.வி.குமார் ஆகியோர் மேசையில் நிற்க, தன்னுடைய ஆரம்பகால நாள்கள் குறித்த நினைவுகளைப் பேசத்தொடங்கினார்

“நான் அட்டகத்தி பண்றதுக்கு முன்னாடி என்னைத் தயாரிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தி என் மியூசிக்கை காட்டி எப்படியாவது எனக்கு ஒரு படம் கிடச்சிடணும்னு என் கூட இருந்தவருதான் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா.

நாங்க அவர் டீம் கூட கிரிக்கெட் விளையாடிருக்கோம். அது ஒரு பேச்சுப் போட்டி மாதிரிதான். நல்லா வாய் பேசுற டீம் ஜெயிச்சிரும். அவங்கதான் ஜெயிப்பாங்க. நல்லா ஏமாத்துவாங்க.” என கலகலப்பாக பேசத்தொடங்கினார்.

“அந்த நேரத்துல நான் ரொம்ப டௌன்னா இருப்பேன். பைப்போலார் மாதிரி இருக்கும். வாய்ப்புகள் கிடைக்கல, முதல் படம் நல்லதா பண்ணணும் நினைச்சேன். அவர்தான் எனக்கு ஆறுதல் சொல்லுவார். என் வீட்டுல அப்பா, அம்மா கிட்ட ‘இவன் நல்ல மனசுக்கு அவனுக்கு நல்லதே நடக்கும்’ன்னு எல்லாம் சொல்லி காமடி பண்ணுவார்.

ரொம்ப நன்றி சிவா, அந்த நேரத்தில எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையது. நல்லா சாப்பிட்டுட்டு, எல்லா படத்தையும் கலாய்ச்சு குறை சொல்லிட்டு, நாங்கதான் பெஸ்ட்னு சொல்லிகிட்டு அந்த மோட்ல இருப்போம்.

தமிழ் படம்தான் என்னுடைய முதல் படமா இருக்கவேண்டியது. என் மியூசிக் நல்லா இல்ல, வேற மாதிரி வேணும்னு என்ன அனுப்பிட்டாங்க. கண்டிப்பா நான் வரவே மாட்டன்னு நிறையபேர் நினைச்சாங்க. ஏன்னா, அட்டகத்திக்கு நான் பண்ணியிருக்க வேண்டிய படம் மட்டும் ஒரு 60 படத்துக்கு மேல இருக்கும். அதுல டாப்ல இருந்தது தமிழ் படம்.அதுக்கப்புறம் அட்டகத்தி, ரஞ்சித்துகு என்னுடைய மியூசிக் பிடிக்கல, நான் எலக்ரானிக் மியூசிக் பண்ணிட்டு இருந்தேன், ரஞ்சித் தான் என்னை வீட்டவிட்டு வெளிய வரவச்சு நாட்டுப்புற இசையைக் கேட்க வைச்சாரு. என்னுடைய கலையை உருவாக்குனதுல அவர்களுடைய பங்கு அதிகம்.

சூது கவ்வும் படத்தை எப்போ பாக்க ஆரம்பிச்சாலும் கடைசிவர பாத்து முடிப்போம். சில படங்கள்தான் அப்படி ஒரு வைப் கொடுக்கும். எனக்கு சூது கவ்வுமும் கடைசி விவசாயியும் அப்படி” என்றார்.

 

Related Posts