காவல் ஆய்வாளர் – உதவி ஆய்வாளருக்கு தலா ஒரு ரூபாய் அபராதம்!: அறப்போர் வழக்கில் தீர்ப்பு!

காவல் ஆய்வாளர் – உதவி ஆய்வாளருக்கு தலா ஒரு ரூபாய் அபராதம்!: அறப்போர் வழக்கில் தீர்ப்பு!

அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில், காவல் ஆய்வாளருக்கும், உதவி ஆய்வாளருக்கும் தலா ஒரு ரூபாய் அபராதம் விதித்து, வெற்றி மனித உரிமை ஆணையம் தீர்ப்பு அளித்து உள்ளது.

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..

ஜெயராமன் முகநூல் பதிவு

“2019 இல் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் புகார் கொடுத்ததாலும் செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்படுகிறது என்று புகார் அளித்ததாலும், கோபம் அடைந்த அப்போதைய காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் IPS தன் அதிகாரத்தை பயன்படுத்தி பல காவல் நிலையங்களில் அறப்போர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்தார்.

இந்த நிலையில், சென்னை கல்லுக்குட்டை ஏரியை பார்வையிட  அறப்போர் இயக்கத்தினர் சென்றோம். எங்களில் 11 பேரை கைது செய்தார் தரமணி காவல் ஆய்வாளர் தேவராஜ். ஒரு மண்டபத்தில் எங்களை அடைத்தார்.

இந்த பொய் வழக்கை எிர்த்து, அறப்போரின் சட்ட போராட்டம் நடத்தியது. இதைத் தொடர்ந்து இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

எங்கள் மீது பொய் வழக்கு தொடர்ந்த தரமணி காவ் ஆய்வாளர் தேவராஜ், உதவி ஆய்வாளர் கவிதா ஆகியோர் மீது மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடுத்தோம்.   இருவரும் தலா ஒரு ரூபாய் நஷ்ட ஈடாக அளிக்க கேட்டு இருந்தோம். விசாரணைக்கு பிறகு மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அதிகாரி இதில் மனித உரிமை மீறல் நடந்து உள்ளது என்று அறிக்கை கொடுத்தார். அதன் பிறகு இதன் மீது மனித உரிமை ஆணையத்தின் விசாரணை (trial) துவங்கி சில மாதங்களுக்கு முன் முடிவுற்றது.

தற்பொழுது  காவல் ஆய்வாளர் தேவராஜ் மற்றும்  உதவி ஆய்வாளர் கவிதா ஆகியோர் மனித உரிமை மீறளில் ஈடுபட்டதாகவும் இனி இது போல செயல்பட கூடாது என்றும்  நஷ்ட ஈடான தலா ஒரு ரூபாய் என்று இருவரும், அறப்போர் இயக்கத்தின் 11 தன்னார்வலர்களுக்கு மொத்தம் ரூ 22 வழங்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையம் தீர்ப்பில் தெரிவித்து உள்ளது.

இந்த ஒரு ரூபாய் என்பது அதிகாரத்தை துஷ்பிரியோகம் செய்யும் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். உயர் அதிகாரிகள் சொன்னால் என்ன வேண்டுமானாலும் பொய் வழக்கு போடுவேன் என்று திரியும் காவல் துறை அதிகாரிகளுக்கு இது பாடமாக இருக்க வேண்டும்.

தேவரராஜும் கவிதாவும் கூண்டில் வந்து நிற்கும் பொழுது அவர்களை பொய் வழக்கு போட சொன்ன எந்த உயர் அதிகாரிகளும் உதவ வரவில்லை.  உயர் அதிகாரிகள் பொய் வழக்கு போட சொன்னால் முடியாது என்று காவல் துறை ஆய்வாளர்கள் சொல்ல வேண்டும். தேவரராஜும் கவிதாவும் போல செயல்பட கூடாது என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதாரணம். இனியோனும் அரசியல் சாசனம் படி சட்டபடி நடப்பதற்கே காவல்துறை பொது ஊழியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் உணர்ந்து நடக்க வேண்டும். 

பல ஆண்டு சட்ட போராட்டம் பிறகு கிடைத்த வெற்றி இது. எங்களுக்கு வாதிட்ட வழக்கறிஞர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தொடர்ந்து அறப்போர் செயல்பாடுகளை ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றி !” என்று தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அறப்போர் இயக்கம் சார்பில், “தீர்ப்புப்படி தமிழ்நாடு அரசு அறப்போர் இயக்கத்திற்கு இந்த நஷ்ட ஈடு தொகையை வழங்கி காவல்துறை அதிகாரிகள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி தற்பொழுது அவர்களுடைய மனித உரிமை மீறல் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Posts