கண்டித்த தமிழிசை! கலங்கிய குமரி அனந்தன்!!

கண்டித்த தமிழிசை! கலங்கிய குமரி அனந்தன்!!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், வயது மூப்பின் காரணமாக தனது 93ம் வயதில் கடந்த 8ம் தேதி மறைந்தார்.
அற்புதமான பேச்சாளரான அவர், காந்தியவாதியாகவும், காமராஜரின் சீடராகவும்  எளிய வாழ்க்கையை வாழ்ந்தார். தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக ‘இலக்கியச் செல்வர்’ என்று போற்றப்பட்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறையும் நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறையும் பொறுப்பு வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும்  பணியாற்றியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு பனை மரப் பணியாளர்கள் நல வாரியத் தலைவராக  நியமிக்கப்பட்டார், 2011ஆம் ஆண்டு அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார்.

குமரி அனந்தன்

நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் .  தமிழகத்தில் தாய்மொழித் தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்தியவர். செங்கோட்டையில் வீரவாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்தவர். எட்டயபுரம் கூட்டுறவு நூற்பாலைக்கு பாரதியார் பெயரிட உண்ணா நோன்பிருந்து கோரிக்கையில் வெற்றி பெற்றவர்.

பைகிராப்ட்ஸ் ரோடு என்று பெயர் கொண்டிருந்த சாலைக்கு பாரதி சாலை எனப் பெயர் மாற்றப்பட, முனைந்து செயலாற்றியவர்.  வானொலி என்பதை ஆகாஷ்வாணி என்றாக்க முனைந்தபோது எதிர்த்து சென்னையில் பேரணியும் சாத்தூர் வைப்பாற்று மணல் வெளியில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்; தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோரை அழைத்து பெரிய மாநாடு நடத்தி வானொலி தொடர்ந்து நிலைக்க வழி வகுத்தவர்.

நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட போது POST- CARD; MONEY ORDER FORM என்பனவற்றைத் தமிழில் அஞ்சலட்டை, பணவிடைத்தாள் என்று தமிழில் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நிறைவேற்றி CHEQUE என்பது காசோலை என அழைக்கவும், தந்தியை விரைவு வரைவு என அழைத்துச் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தவர்.

மதுவிலக்கு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தமிழுக்கு முன்னுரிமை, நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 17 முறை  நடைபயணங்களை மேற்கொண்டார்.

குறிப்பாக, கடந்த 2016ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் சென்னை வரை பூரண மதுவிலக்கு கோரி அவர் மேற்கொண்ட நடைபயணம், 2017ஆம் ஆண்டு அவர் சென்னையிலிருந்து தருமபுரிக்கு மேற்கொண்ட நடைபயணம் ஆகியவை மிக முக்கியமானவை.

செம்பனை நாடு-மலேசிய அனுபவம், உலகம் சுற்றும் குமரி-பயண அனுபவங்கள், கடலில் மிதக்கும் காடுகள்- அந்தமான் பயணம், பாரதிரப் பாடிய பாரதி, தேசமும், நேசமும், விடுதலை வீரர்களின் வீரரும் தியாகமும், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், தமிழ் தரும் காட்சிகள், தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகளின் காலடி தேடி, பேச்சுக் கலைப் பயிற்சி உள்ளிட்ட பல  பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

தமிழக அரசு குமரி அனந்தனுக்கு மகாகவி பாரதியார் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, தகைசால் தமிழர் விருது ஆகியவற்றை வழங்கியது

கடந்த 2022ஆம் ஆண்டு அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

குமரி அனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்களில் சிலர்..

இந்நிலையில்தான் கடந்த 8ம் தேதி அவர் மறைந்தார்.

அவரது மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் குமரிமங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்குத் தலை மகனாக 1933-ம் ஆண்டு மார்சு 19-ம் தேதி பிறந்தவர் குமரி அனந்தன்.

மனைவி கிருஷ்ண குமாரியுடன் குமரி அனந்தன்…

இவரது மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. இந்த இணையருக்கு நான்கு மகள்களும் ஒரு‌ மகனும் உள்ளனர். இவரது மூத்த மகள்தான், தமிழக பாஜக தலைவர்களில் ஒருவரான மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆவார்.

உடல் நிலை ஓரளவு இயல்பாக இருந்த நிலையிலும் தனியே வாழ்ந்து வந்தார் குமரி அனந்தன்.  முழுதும் முடியாத நிலையில் அவர் தமிழிசை வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.

அவர் தனது தந்தை மறைவு குறித்து, ” மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா. நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ. அதை மனதில் கொண்டு உங்கள் பெயரில், நாங்கள் செய்வோம் என்று உறுதியோடு உங்களை வழி அனுப்புகிறோம்.

உங்கள் வழியில் நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல. நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும் என்று உங்கள் ஆசையை எப்போதும் நிறைவேற்றுவோம். போய் வாருங்கள் அப்பா. தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை, தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன். நன்றி அப்பா. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் ‘அறம் ஆன்லைன்’ ( aramonline.in) இணைய இதழின் ஆசிரியர் சாவித்திரி கண்ணன் எழுதியுள்ள முகநூல் பதிவு அதிர்ச்சி அளிக்கிறது.

அவர் தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளதவது:

“அரசியல்வாதிகள் நம்மைப் போல இயல்பானவர்களில்லை.

சாவித்திரி கண்ணன்

மிகப் பெரிய இழப்பில் கூட, அரசியல் ஆதாயத்தை நோக்கியதாக இருக்கும் அவர்கள் நகர்வுகள்!

தந்தையின் மறைவில் எவ்வளவுக்கு எவ்வளவு அரசியல் ஆதாயம் அடைய முடியுமோ.., அவ்வளவையும் கூச்ச நாச்சமில்லாமல் செய்து கொண்டிருக்கிறார் தமிழிசை!
கடைசி வரை காங்கிரஸ்காரராக இருந்து மறைந்த குமரி ஆனந்தன் இறந்த சூழலில், தமிழிசை தான் வாழும் சாலிகிராமம் பகுதியை சுற்றிலும் குமரியாருக்கு பல லட்சங்கள் செலவில் பாஜக சார்பிலான பேனர் வைத்து திரும்பிய திக்கெல்லாம் அசத்தி இருந்தார்.
தமிழிசை செய்த அலப்பறைகளால் குமரியாருக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற காங்கிரஸ்காரர்கள் அனைவருமே பெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளானார்கள்!
குமரியாரின் 75 ஆண்டுகால காங்கிரஸ் பயணத்தின் பலனை அவரது இறப்பில் பாஜகவிற்கு கொண்டு போகும் தமிழிசையின் வேகத்தைக் உணர்ந்து கொண்ட ஸ்டாலின், திக்கெல்லாம் தீந்தமிழைப் பரப்பிய குரியாருக்கு திராவிட மாடல் அரசின் சார்பில் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடத்தினார்.
முன்னதாக அவர் தங்குவதற்கு ஏதுவாக தனி வீடும் திமுக அரசு தான் ஏற்பாடு செய்து தந்தது.
சாவித்திரி கண்ணன் முகநூல் பதிவு
ஏழட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஒரு நிகழ்வில் நான் வழங்கிய பாரம்பரிய சிறுதானிய இயற்கை உணவை விரும்பி ரசித்து உண்ட குமரியார் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, ’’சாவித்திரி கண்ணன் ரொம்ப அற்புதம். இது போல தினசரி சாப்பிடமட்டோமா..? என ஏக்கமாக உள்ளது. நான் நாளும் ஹோட்டல் உணவை உண்டு உடல் நலிந்து வருகிறேன். நீங்கள் ஒரு சின்ன உணவகம் ஆரம்பியுங்கள். எனக்கு வரும் எம்.பிக்கான ஓய்வூதியத்தை அப்படியே உங்ககிட்ட கொடுக்க சித்தமாயிருக்கேன்’’ என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
தனித்து நடமாட முடிந்த வரையிலும் அவர் மகள் வீட்டிற்கு சென்று தங்க விரும்பாமல் வைராக்கியமாக இருந்தார் என்பதற்காகவே இந்த நிகழ்வை சொல்கிறேன்.
உடல் மிகவும் நலிவுற்ற நிலையில் தான் கடைசி சில வருடங்கள் மகள் தமிழிசையுடன் தங்க நேர்ந்தது. அப்போது வழக்கம் போல அவர் பாஜகவை கண்டித்து அறிக்கைகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதைக் கண்ட தமிழிசை அப்பாவிடம் ’’இங்கே உட்கார்ந்து கொண்டு இதை செய்யக் கூடாது’’ என கண்டித்துள்ளார். இதை சத்தியமூர்த்தி பவனில் உள்ள கோபண்ணாவிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் குமரியார்.
ஆனால் இன்றோ, ’’தேசியவாதியாக இருந்த எனது தந்தை உயிரோடு இருந்திருந்தால் உள்துறை அமைச்சரே தன் வீட்டிற்கு வந்ததை எண்ணி பூரித்து போய் மகிழ்ந்திருப்பார்’’ என்று வேறு கதைக்கிறார் தமிழிசை!
காந்தியைக் கொன்ற கட்சியை /நேருவை நிதமும் பழிக்கும் கட்சியை/ காங்கிரஸ் இல்லாத இந்தியாவை, உருவாக்குவதே தன் இலக்கு என்று கர்ஜிக்கும் கட்சியின் தலைவரின் வருகை நிச்சயம் குமரியாருக்கு உவப்பாக இருந்திருக்காது.
தன் இறப்பிற்கு பிறகு தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு இப்படிப்பட்ட இழுக்கு ஏற்படும் என்பதை அசல் காங்கிரஸ்காரான குமரியார் ஒரு போதும் நினைத்திருக்க முடியாது.
இது ஒருபுறமிருக்க, தமிழக காங்கிரஸ் குமரியார் மறைவுக்கு போதுமான அட்டென்ஷன் தரவில்லை என்பதையும் சொல்லித் தான் ஆக வேண்டியுள்ளது” – இவ்வாறு சாவித்திரி கண்ணன் குறிப்பிட்டு உள்ளார்.
(முகப்பு படம்: குமரி அனந்தன் – தமிழிசை சவுந்திரராஜன்)

Related Posts