கூழாங்கல்  – திரை விமர்சனம்

கூழாங்கல்  – திரை விமர்சனம்

அறிமுக இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோரது தயாரிப்பில், பல சர்வதேச விருதுகளை வென்றதோடு, ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் ‘கூழாங்கல்’. சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்போம்.

தந்தை மற்றும் மகன் இருவருடைய நடைப்பயணத்தை வைத்துக்கொண்டு, இந்தியாவின் தற்போதைய உண்மை நிலையும், பெரும்பான்மை மக்களின் நலிவடைந்த வாழ்க்கையையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுவதுடன் பல்வேறு பிரச்சனைகளை காட்சி மொழியில் பேசியிருப்பது தான் ‘கூழாங்கல்’ படத்தின் கதை.

கொலை வெறியோடு கோபத்தோடு இருக்கும் தந்தை பேருந்தில் பயணிக்க இருந்த போது  அவரது கவனத்தை திசை திருப்பிய சிறுவன், அவரை ஆள் நடமாட்டம் இல்லாத பொட்டல் காட்டில் நெடுந்தூரம் நடந்து அழைத்து செல்கிறான்.சூரிய வெப்பத்தின் மூலம் அவருக்குள் இருக்கும் கோபத்தை தணிய வைக்கிறார். இவர்களுடைய இந்த சூடான நடைப்பயணத்தில், பெரும்பாலான இந்திய மக்களின் வாழ்வியலை மிக அழுத்தமாகவும், அழகாகவும் பதிவு செய்திருக்கிறது இந்த ‘கூழாங்கல்’ திரைப்படம்.

இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் தண்ணீர் இல்லாமல் திண்டாடும் அதிர்ச்சிகரமான உண்மையை அமைதியாக சொல்லியிருக்கிறது இந்த படம். பார்ப்பவர்களின் ஆழ் மனதில் பதியும் வகையில் அந்த காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தை கதாபாத்திரத்தில் கருத்துடையான் எதார்த்தமான நடிப்பில் கணபதியாகவே வாழ்ந்திருக்கிறார். தனது நடையில் கூட அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மகன் வேடத்தில் நடித்திருக்கும் சிறுவன் செல்லப்பாண்டி அற்புதமான நடிப்பு.முதல் படத்திலேயே பார்ப்பவர்களின் இதயத்தில் பதிந்து விட்டார்.. தந்தையின் கோபத்தை பார்த்து மிரண்டு போனாலும் அதை வெளிக்காட்டாமல் தைரியமாக பயணிப்பது, அவரிடம் அடி வாங்கினாலும் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் மௌனமாக இருந்தே பாராட்டு பெறுகிறார்.

இரண்டு கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களுடைய நடைப்பயணம் இதை வைத்துக் கொண்டு சமூக பிரச்சனைகளை பேசியிருக்கும் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ், அவற்றை வசனங்கள் மூலம் விளக்காமல் காட்சி மொழியின் மூலம் விளக்கியிருப்பது, பார்வையாளர்களையும் அந்த கதாபாத்திரங்களுடன் பயணிக்க வைத்துவிட்டார்.

இந்தியா உலக பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லப்பட்டாலும், பெரும்பான்மையான மக்கள் இன்னமும் வறுமையின் பிடியில் தான் இருக்கிறார்கள் என்பதை எலிக்கறி சாப்பிடும் காட்சி வழியாக இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் சொல்லியிருக்கிறார்.

குறைந்த அளவு சுரக்கும் அழுக்கு படிந்த தண்ணீருக்காக காத்திருக்கும் பெண்களின் கூட்டம். இதன் மூலம்  தண்ணீர் பிரச்சனை இங்கு எந்த அளவுக்கு அதிகரித்து வருகிறது என்பதை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இப்படி படம் முழுவதும் இந்தியாவில் இருக்கக்கூடிய பல பிரச்சனைகளை தற்போதைய நிலையை மிகத் தெளிவாக சொல்லியிருப்பது, கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையும், கிராமத்து மக்களின் வாழ்வியல் முறை மற்றும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கை போராட்டங்கள் என அனைத்து விஷயங்களையும் வசனமாக பேசாமல், காட்சியாக வெளிப்படுத்தியிருப்பது படத்தை அணு அணுவாக ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் விக்னேஷ் குமுனை மற்றும் ஜெய பார்த்திபன் இருவரின்  உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. உச்சி வெயிலில் கேமராவை சுமந்தபடி ஒளிப்பதிவு செய்தார்கள் என்பது நம்மால் உணர முடிகிறது.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பொருந்தியிருக்கிறது.  75 நிமிடங்கள் ஓடும் படத்தின் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை பார்வையாளர்களின் கவனத்தை சிதறவிடாமல் கட்டிப் போட்டு விடுகிறது இயக்குநரின்  கதாபாத்திரங்கள்.

எந்த இடத்திலும் வசனங்கள் மூலம் பேசாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், காட்சிகளின் சூழல்களையும் பேச வைத்து ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார் இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ்.

மொத்தத்தில் ‘கூழாங்கல்’ நமது சமூகத்தின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.