மகுடம் துறந்த மக்கள் பணி: இலக்கை நோக்கி ஓர் அறப்பயணம்!: கமல் அறிக்கை!
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று உள்ள மக்கள் நீதி மய்யம், இந்தத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளது. தங்களது உதய சூரியன் சின்னத்தில் நிற்க வற்புறுத்தியதால் அக்கட்சி இப்படியோர் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. அதே நேரம், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம்” என அறிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது, முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது – கமல்ஹாசன்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எங்களின் அடையாளமான பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒருமித்த முடிவு.
நாங்கள் வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை எனவும், தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும், மதவாத சூழ்ச்சியில் இருந்து விழிப்புணர்வு பெறவும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது, முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது.
இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. இந்த முடிவு உங்கள் உணர்வுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும் நான் செலுத்தும் மரியாதையாக கருதுகிறேன். என்னைப் புரிந்துகொண்டு சுயநலமின்றி என்னோடு பயணிக்கும் எனது தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

