” என்னை இயக்குவது இளையராஜாதான்!”: தனுஷ் நெகிழ்ச்சி!

” என்னை இயக்குவது இளையராஜாதான்!”: தனுஷ் நெகிழ்ச்சி!

திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை, திரைப்படமாக உருவாகிறது. அந்தத் திரைப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.

ராக்கி, சாணிக் காகிதம், கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன் மற்றும் மெர்குரி மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை வழங்குகின்றன. ஸ்ரீராம் பக்திசரண் சி.கே. பத்ம குமார், வருண் மாத்தூர், இளம்பரிதி கஜேந்திரன் மற்றும் சௌர்ப் மிஸ்ரா ஆகியோர் இப்படத்தினை தயாரிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ்  தயாரிப்பு வடிவமைப்பு செய்கிறார்.

‘இளையராஜா தி கிங் ஆப் மியூசிக்’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இளையராஜா படத்தை கமல்ஹாசன் அறிமுகம் செய்தார்.

இளையராஜா படத்தை அறிமுகம் செய்து பேசிய கமல்ஹாசன் இளையராஜாவுடன் தன்னுடைய பயணத்தை பற்றி சில நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் இளையராஜா வாழ்க்கையை 8 பாகங்களாக எடுக்கலாம் என பெருமிதம் கொண்டார்.

நடிகர் தனுஷ் பேசுகையில், “”இது எனக்கு உண்மையிலேயே நிறைவான தருணம். எனது சிறுவயதிலிருந்தே, மேஸ்ட்ரோ இளையராஜா சாரின் மயக்கும் மெல்லிசைக்கு நான் ரசிகன். நம் எண்ணங்களே நம்மை வடிவமைக்கப்படுகின்றன என்று கூறுவார்கள். அது தான் உண்மை, நாம் முழு மனதுடன் நம் கனவை நோக்கி நம்மை அர்ப்பணிக்கும் போது, அவை நிறைவேறும். பலர் தங்கள் மன அமைதிக்கு இளையராஜாவின் பாடல்களை நாடுகிறார்கள்.

பலர் உறக்கத்திற்காக அவரது பாடல்களில் மூழ்குவார்கள், நான் என் பல இரவுகளை அவரது இசையுடன் கழித்துள்ளேன். வெள்ளித்திரையில் அவரது பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இப்போது அது நடப்பது மிகுந்த மகிழ்ச்சி. எனது திரை வாழ்க்கையில் ஆரம்பம் முதல் இப்போது வரை, ஒரு நடிகனாக உண்மையிலேயே சிறப்பானநடிப்பை வழங்க வேண்டிய தருணத்தில் எல்லாம், எனது இயர்போன்கள் மூலம் அவரது இசையமைப்பில் மூழ்கி, அதன் மூலமே என் நடிப்பை வெளிப்படுத்துவேன். இன்று வரை எனக்கு நடிப்பு சொல்லித்தருவது அவரது இசை தான். இப்படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன். இளையராஜா சாரின் உண்மையான அபிமானியான மாண்புமிகு கமல்ஹாசன் சாரின் வருகைக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அருண் மாதேஸ்வரன் ஒரு மகத்தான பொறுப்பின் கனத்தை உணர்கிறார் என்பது புரிகிறது. ஆனால் இந்த திரைப்படத்தை மிக மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் உருவாக்கலாம் என அவரை ஊக்குவிக்கிறேன். ஏனெனில் இது கலையின் மீதான காதல் இளையராஜாவின் மீதான காதல். அனைவருக்கும் என் நன்றிகள்” என்றார் தனுஷ்.

Related Posts