அரசியலிலும் திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்த ஆர்.எம்.வீரப்பன் – நூற்றாண்டு விழாவில் புகழஞ்சலி

அரசியலிலும் திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்த ஆர்.எம்.வீரப்பன் – நூற்றாண்டு விழாவில் புகழஞ்சலி

ரசியல் களத்திலும் திரை உலகிலும் புயல் போல சுழன்று தனக்கென தனி வரலாறு படைத்த ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, சென்னை வாணி மஹாலில் விழாக்கோலம் பூண்டது. அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்த வண்ணமயமான விழாவில், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், நீதித்துறை வல்லுநர்கள் எனப் பலரும் திரண்டு வந்து தங்களின் நெஞ்சார்ந்த புகழஞ்சலியைச் சமர்ப்பித்தனர்.

பெரியார், அண்ணா என திராவிட இயக்கத்தின் பெரும் ஆளுமைகளுடன் தோளோடு தோள் நின்று பயணித்தவர் ஆர்.எம்.வீ. பின்னாலில் எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கியபோது, அவருடன் இணைந்து அரசியல் சாம்ராஜ்யத்தை வலுப்படுத்தினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு மாபெரும் முதல்வர்களின் அமைச்சரவைகளிலும் அங்கம் வகித்து, ஐந்து முறை தமிழக அமைச்சராக வலம் வந்தவர். மேலவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி, தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார்.

அரசியலில் மட்டுமல்ல, வெள்ளித்திரையிலும் ஆர்.எம்.வீரப்பனின் ஆதிக்கம் செழித்தோங்கியது. தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் பல திரைப்படங்களைத் தயாரித்த பெருமை இவருக்கு உண்டு. வெற்றிப் படங்களுக்குத் திரைக்கதை அமைத்து ‘திரைக்கதை சித்தர்’ என்றும் திரையுலகில் அன்போடு கொண்டாடப்பட்டார்.‘ரிக்ஷாக்காரன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘தெய்வத் தாய்’ என எம்.ஜி.ஆரின் வெற்றிப் பயணத்திற்குத் தோள்கொடுத்தவர், ரஜினிகாந்தின் ‘மூன்று முகம்’, ‘பாட்ஷா’ போன்ற மெகா ஹிட் திரைப்படங்களையும் வழங்கி திரையுலகை வியப்பில் ஆழ்த்தினார். இவருடைய மருமகன் டி.ஜி.தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் மூலம் அதே திரைப்பாரம்பரியத்தை வெற்றிகரமாகத் தொடர்கிறார். எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல் முதல் இன்றைய தலைமுறை நட்சத்திரங்கள் வரை அனைவரின் படங்களையும் தயாரித்து சாதனை படைத்து வரும் டி.ஜி.தியாகராஜன், இந்த நூற்றாண்டு விழாவை முன்னின்று ஒருங்கிணைத்துச் சிறப்பித்தார்.

விழாவில் பங்கேற்ற சான்றோர்கள் ஆர்.எம்.வீ.யின் நினைவுகளைப் பகிர்ந்து பரவசமடைந்தனர். “அரசியலில் ஆர்.எம்.வீ. போல் தூய்மையானவரைப் பார்க்க முடியாது” என ஜெகத்ரட்சகன் உருகினார். டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் சண்முகம் அவரை ‘அரசியல் சாணக்கியர்’ எனப் போற்றினார். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார், இன்றைய இளைஞர்கள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒழுக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, ஆர்.எம்.வீ. வாழ்ந்த சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், “அரசியலை நாகரிகமாக நடத்தியவர் ஆர்.எம்.வீ.” எனப் புகழாரம் சூட்டினார்.

கவிஞர் முத்துலிங்கம், இயக்குநர் பி.வாசு, திருநாவுக்கரசர் எனப் பல பிரபலங்கள் பங்கேற்ற இந்நிகழ்வு, ஒரு மாபெரும் ஆளுமையின் நினைவைப் போற்றுவதோடு நின்றுவிடாமல், எதிர்காலத் தலைமுறைக்கு அவரது வாழ்வியல் நெறிகளையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தரும் வரலாற்றுப் பேழையாக மிளிர்ந்தது!