‘மிராய்’: திரை விமர்சனம்
டோலிவுட்டில் இப்போது, மித்தாலஜி ஜானர் படங்கள் நிறைய வருகின்றன.. ஹிட் ஆகின்றன.
அந்த வரிசையில் வந்திருக்கிறது ‘மிராய்’.
கி.மு 232-ல் மாமன்னர் அசோகர், தான் நடத்திய கலிங்க போரினால் ஏற்பட்ட பேரழிவைக் கண்டு மனம் வருந்தி தன்னிடம் உள்ள சக்தியை 9 புத்தகங்களில் அடக்கி அதை 9 போர் வீரர்களிடம் ஒப்படைக்கிறார். பல யுகம் கடந்து தற்போது அந்த புத்தகங்கள் ஒவ்வொன்றையும் அடைந்து உலகையே அழிக்க திட்டமிடுகிறார் மனோஜ் மஞ்சு.
இதை அறிந்துக்கொண்ட ஸ்ரேயா இதை அழிக்க ஒரே தீர்வு, தன் மகன் தான் என அறிகிறார்.
அதுமட்டுல்ல… தனது மகன் அநாதையாக வளவர வேண்டும், குறிப்பிட்ட 9வது புத்தகத்தை எதிரி அடையும் நேரத்தில், ராமரின் ஆயுதம் மிராஜை கொண்டு, எதிரியைஅழிக்க வேண்டும் என்பதே விதி.
ஆகவே, தனது மகனை அனாதையாக வாரணாசி-ல் விட்டு செல்கிறார் ஸ்ரேயா. 24 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரேயாவின் மகனான தேஜாவை, நாயகி ரித்திகா தேடி வருகிறார்.. அவரைப் பற்றிய உண்மையைச் சொல்கிறார்.
அதன் பிறகு, தேஜா மிராஜை அடைந்தாரா, குறிப்பிட்ட 9வது புத்தகத்தை கைப்பாற்றினாரா, வில்லனை அழித்தாரா என்பதே கதை.
பேண்டசி நாயகனாக கலக்குகிறார் தேஜா. தன்னை அறிந்த பிறகு அவர் காட்டும் அதிரடிகள் வியக்க வைக்கின்றன. எதிரிகளை துவம்சம் செய்கிறார். அவரது திரைப்பயணத்தில் இதுவும் ஒரு மைல் கல் படம்!
நாயகி ரித்திகாவும் சிறப்பாக நடித்து இருக்கிறார். வெறும் ஆடல் பாடல் என்று மட்டும் இல்லாமல், நாயகனின் சக்தியை அவருக்கு உணர்த்தும் கதாபாத்திரம். பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து இருக்கிறார்.
உலகை அழிக்க வரும் வில்லனாக, மனோஜ் மஞ்சு. அவரது உயரமும், தோற்றமும் மிரட்டல். பயப்பட வைக்கிறார்.
படத்தின் முதல் நாயகன், சி.ஜி.தான். குறிப்பாக, பிரம்மாண்ட பருந்து வரும் காட்சி. தவிர படம் முழுதும் – அதுவும் சண்டைக் காட்சிகளில் – தத்ரூபமாக கிராபிக்ஸ் உருவாக்கி இருக்கிறார்கள்.
கௌரா ஹரியின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் அபாரம்.
வித்தியாசமான கதைக்களம், அனிமேசன், இயல்பான திரைக்கதை, ஒளிப்பதிவு என இயக்குநர் கார்த்திக் கட்டம்னேனிமுத்திரை பதித்து இருக்கிறார்.
குடும்பத்துடன் – குறிப்பாக குழந்தைகளுடன் – பார்த்து ரசிக்கலாம்.
ரேட்டிங்: 3.1/5

