“மாதவிடாய் விடுமுறை அவசியமா?” :மோகனின் ஹரா பட  இயக்குநர் விஜய் ஸ்ரீ பதில்

“மாதவிடாய் விடுமுறை அவசியமா?” :மோகனின் ஹரா பட  இயக்குநர் விஜய் ஸ்ரீ பதில்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மோகன் நடிப்பில் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஹரா திரைப்படம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

த்ரில்லர் என்பதோடு, மருந்து மாஃபியாக்களைப் தோலுரித்த திரைப்படம்; ‘அனைவரும் சட்டம் தெரிந்திருக்க வேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்தும் படம் என்பதாலும் கவனத்தை ஈர்த்தது.

அதே நேரம் ஒரு காட்சி, வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

பருவமடைந்த தனது மகளை, மாதவிடாய் காலத்தில் பள்ளித்தேர்வு எழுத மோகன் அனுமதிக்கமாட்டார்.பெண் ஆசிரியர்கள், “மாணவிகளுக்கு நாப்கின்களை நாங்களே தருகிறோம். தவிர, தேர்வு எழுதவில்லை என்றால்  மாணவிக்கு ஒரு வருடம் வீணாகிவிடுமே.. .நாங்களும் பெண்கள்தானே? நாங்களும் இந்தச் சூழல்களை கடந்துதானே வந்திருக்கிறோம்” என்று சொல்வார்கள். தவிர, பள்ளி நிர்வாகத்திடம் பேசி, வீட்டிலாவது தேர்வு எழுதட்டும் என்பார்கள்.

ஆனால் அப்பா மோகன், தனது மகளை தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்.

இந்த காட்சிதான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, ஹரா இயக்குநர் விஜய் ஸ்ரீ “நான் பெண்களுக்கு  மிகவும் மதிப்பளிக்கக் கூடியவன். அதனால்தான் எனது மூன்று படங்களிலுமே பெண்களின் உணர்வுகளை மதிக்கும் காட்சிகளை அமைத்தேன்.  குறிப்பாக, முதல் படத்திலேயே ’பெண்களின் அனுமதி இல்லாமல் தொடுவது சட்டப்படி குற்றம்’ என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தேன்.  எனது இரண்டாவது படமான ’பவுடர்’ படத்தில் ’பெண்களை காப்பாற்ற ஹீரோதான் வருவார், ஆண்கள்தான் வரவேண்டும் என்று காத்திருக்கக்கூடாது. நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள, பிரச்னைகளை எதிர்த்து நின்று போராடவேண்டும்’ என்றேன்.  குறிப்பாக, பெண்கள் தங்களது பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வைத்துக்கொள்ளவேண்டும்  என்று காட்சி அமைத்தேன்.

அதே போலத்தான் ஹரா படத்திலும் பெண்களின் வலிகளையும் வேதனைகளையும் உணர வைக்கும் பல்வேறு காட்சிகள் இருக்கின்றன. ஆகவேதான்  கூட்டம் கூட்டமாக பெண்கள் இந்தப் படத்தை  பார்க்கிறார்கள். மோகன் சார் ரசிகைகள் ஒரு பக்கம் வருகிறார்கள் என்றால்,  இன்னொரு பக்கம் இந்த கதையின் கருவுக்காக வருகிறார்கள்.

அதுவும்  குறிப்பிட்ட காட்சிக்குப் பலத்த கை தட்டல் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.

ஆகவே, மக்கள் இதை ஏற்றுக்கொன்றார்கள் என்றுதானே அர்த்தம். என் அம்மா, என் அக்கா, என் மனைவி, மகள் என்னைச் சுற்றி எல்லாமே பெண்கள் சூழ்ந்திருக்கிறார்கள்.  அதனால்தான், பெண்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படங்களாகவே இயக்குகிறேன். இயக்குறேன்.

குறிப்பிட்ட காட்சியில மோகன் சாரோட மகள் பருவமடைந்து இருப்பார்.  முதல் தடவை வலியை அனுபவிக்கும்போது அதைப் பற்றிய புரிதல் இல்லாம வேதனையில் இருப்பார் அந்த பெண்.  தற்போதெல்லாம் ஐந்து, ஆறாம் வகுப்பு படிக்கும்போதே, குழந்தைகள் பருவமடைந்துவிடுகிறார்கள்.

அந்த நேரத்தில் தேர்வு எழுதச் சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்துவது, அவர்களது  வலியையும் வேதனையையும் கூடுதலாக்கும். ஆகவே அப்போது,  ஓய்வு எடுத்துக்கொள்வதே சரி.

கொரோனா காலத்தில் இரண்டு வருடங்கள், பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே மாணவர்கள் இருந்தார்களே.. அதனால்  என்ன இழப்பு ஏற்பட்டுவிட்டது?

அதேமாதிரி, மகள் பருவடைந்ததும் அப்பா மோகன் சார் மகளைப் பார்க்க போவார். இந்தச் சூழலில் பார்க்கக்கூடாது என்று மனைவி தடுப்பார்.

ஆனாலும் மகளை பார்க்கிறதுல என்ன தப்பு இருக்கு என்று முற்போக்காகவே காட்சி அமைத்து உள்ளேன்.

நெதர்லாந்து நாட்டில், பருவமைடைந்த பெண்களுக்கு விடுமுறை அளிக்கிறார்கள். அதே போல இங்கும் செய்ய வேண்டும்.தன்னோட குழந்தை வலியிலும் வேதனையிலும் உட்கார்ந்து தேர்வு எழுதக்கூடாது என ஒரு அப்பா நினைப்பதில் என்ன தவறு?  இருக்கு? பெண்கள் ஏஜ் மத்தபடி, பீரியட்ஸ் டைம்ல பெண்கள் என்ன வேணாலும் பண்ணலாம். அது அந்தப் பொண்ணோட கட்ஸ்தான்!

மோகன் சார் அந்தக் காட்சியில் மிகவும் விரும்பி நடித்தார். அந்தக் காட்சியை வைக்கலாமா வேண்டாமா என  யோசிக்கும்போது கண்டிப்பா வைக்கணும், பெண்களோட வலியை பேசும் காட்சி இது..  கண்டிப்பா இந்த காட்சி பேசப்படும் என்று மோகன் சார் சொன்னார். அதே மாதிரி பேசப்படுவதில் எனக்கு மகிழ்ச்சி. ஓர் ஆரோக்கியமான விவாதத்தை தூண்டினதுல ரொம்ப சந்தோஷம்.

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளித்தால்,  பணியிடங்களில் வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் ஏற்படுமே என்று நினைக்கலாம்.

கட்டாயமாக லீவு கொடுக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. தேவைப்படுகிறவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றுதான் சொல்கிறேன். இந்தக் காட்சியை பார்த்துவிட்டு பழைமையானது என்று சொல்லலாம். மாதவிடாய் காலத்தில் இன்னமும் நகர்புறங்களில்கூட துணியைப் பயன்படுத்தும் பெண்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் இலவசமா நாப்கின் கொடுக்கவேண்டிய சூழல் என்பதை யோசிக்க வேண்டும். அதாவது இன்னும் போதிய விழிப்புணர்வு வரலை என்பதுதானே யதார்த்தம்” என்று தெரிவித்து இருக்கிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி.