விஷால் நிகழ்ச்சியை நடத்தவிடமாட்டோம்! முற்றுகையிடுவோம்!: த.வா.க. எதிர்ப்பு!

விஷால் நிகழ்ச்சியை நடத்தவிடமாட்டோம்! முற்றுகையிடுவோம்!: த.வா.க. எதிர்ப்பு!

நடிகர் விஷால் தலைமையில் வரும் மே 18ம் தேதி, நாகர்கோயிலில் நடக்கும் நட்சத்திர கலைவிழாவுக்கு, தமிழக வாழ்வுரிமை கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதையடுத்து அன்று நிகழ்ச்சி நடக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் விஷால், தேவயானி, கஸ்தூரி, பாண்டியராஜன், செந்தில், இயக்குநர்கள் எஸ்.ஏ.சி., கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு, ஆர்.வி.உதயகுமார், இசையமைப்பாளர் தீனா உள்ளிட்டோர் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

‘மெகா ஸ்டார் நைட்: கோடையில் ஒரு ஜாலி’ என்று விளம்பரப்படுத்தப்பட்டு உள்ள இந் நிகழ்ச்சிக்கு, டிக்கெட் கட்டணங்களாக ரூ.500 முதல் ரூ.5000 வரை ஆகும்.

இந்நிலையில், “கடந்த 2009ம் ஆண்டு இதே மே 18ம் தேதிதானே, ஈழத்தில் நடந்த இன அழிப்பு போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்! இந்த நாளை உலகம் முழுதும் உள்ள தமிழர்கள், துக்க நாளாக கடைபிடிக்கின்றனரே! இந்நிலையில், அதே தினத்தில் ஒரு கொண்டாட்ட நிகழ்வு தேவையா?” என்று சமூக வலைதளத்தில் பலரும் ஆதங்கத்துடன் கருத்திட ஆரம்பித்தனர்.

இதற்கிடையே, சோசலிச மையம் என்ற அமைப்பைச் சேர்ந்த இரா.மருதுபாண்டியன்தனது முகநூல் பாக்கத்தில், ” மே 18 என்பது தமிழர்கள் வாழ்வில் துயரம் தோய்ந்த நாள். இலட்சக்கணக்கான தொப்புள்கொடி உறவுகள் அழித்தொழிக்கப்பட்ட நாள்; படுகொலை செய்யப்பட்ட நாள். துயர மிகுந்த இந்த நாளில் கொண்டாட்டத்தை நடத்த நினைக்கிறார்கள் சில கருங்காலி அமைப்புகள். நண்பர்களே! நாம் இதை அனுமதிக்கக் கூடாது. உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களும், தாய் தமிழகத்தில் வாழ்கின்ற தமிழர்களும், அரசியல் இயக்கங்களும் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சியை அன்றைய தேதியில் நடக்காமல் செய்ய வேண்டும்.

அனைவரும் இதை பகிர்ந்து, இந்த நிகழ்ச்சியை அன்றைய நாளில் நடப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று பதிவிட்டார்.

இதையடுத்து அவருடன் tamilankural.com இணைய இதழ் சார்பாக பேசினேன். அவர், “கொண்டாட்ட நிகழ்வுகளை மே 18 அல்லாமல் வேறு நாட்களில் வைத்துக்கொள்ளலாம். அன்று நிகழ்ச்சி நடைபெறுவதற்கு தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இன்னும் பல கட்சிகள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும்” என்றார்.

மேலும், இவரது பதிவை, தமிழக வாழ்வுரிமை கட்சியின், எஸ்.பி. உதயகுமார், தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார்.அக்கட்சியைச் சேர்ந்த ஜெகதீச பாண்டியன், தனது முகநூல் பக்கத்தில்,”இந்த விளம்பரத்தில் இரண்டாவதாக உள்ள அலைபசி எண்:9443118103 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் பெயர் ஜெயசீலன் என்றார்,ஐயா,மே18ஆம் தேதியை ஏன் தேர்ந்துடுத்தீர்கள் என்றேன். ‘அரசை மே18ஐ துக்கநாளாக அறிவிக்க சொல்லுங்கள்.. அப்படித்தான் நடத்துவோம்,உங்களால் முடிந்ததை பாருங்கள்’ என்று கூறிவிட்டு அலைப்பேசியை அவரே துண்டித்து விட்டார்.

மீண்டும் தொடர்பு கொண்டேன்; ழைப்பை ஏற்க வில்லை!

‘தமிழக வாழ்வுரிமைக்கட்சி ஒரு போதும் இந்த நிகழ்ச்சியை மே18ல் நடத்த விடாது’ என்று குரல் பதிவு அனுப்பி விட்டேன்.

நடிகர் திரு,விசால் அவர்கள் எண்ணிற்கு தொடர்பு கொண்டேன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது,

மே18 என்பது ஒரு தனி மனிதனின் இழப்போ,அல்லது ஒரு குடும்பத்தின் இழப்போ அல்ல,ஒரு தேசிய இனத்தின் பெருங்கணவு சிதைக்கப்பட்ட நாள்!

எங்கள் துக்கத்தில் நீங்கள் பங்கெடுக்காமல் இருக்கலாம்.குறைந்த பட்சம் அந்த நாளை கொண்டாடாமல் இருக்கலாம் அல்லவா?

அண்ணன் வேல்முருகன் அவர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்து வெறொரு தேதியில் நடத்துங்கள் என்று கல்லூரி நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பி இருக்கிறார்,

“உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு”என்ற கொள்கை முழக்கத்தை வைத்து இயக்கம் நடத்திய ஐயா சிபா ஆதித்தனார் அவர்களின் குடும்பம் நடத்தும் கல்லூரி திடலில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை வேறொரு தேதிக்கு மாற்றும் என்று நம்புகிறோம்!” என்று ஜெகதீச பாண்டியன் கருத்திட்டு உள்ளார்.மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின், குமரி மேற்கு மாவட்ட செயலாளர் செ. ரூபின் ஆன்றணி தனது முகநூல் பக்கத்தில், “மே-18, உலகத் தமிழர்கள் வாழ்வில் துயரம் தோய்ந்த கருப்பு நாள்.அந்நாளில் கூத்தாடிகளின் குத்தாட்டமா ? குலுக்கலாட்டமா ?
தமிழர் அமைப்புகள் சார்பில் கருப்புக் கொடிகளுடன் மறியல் போராட்டம்
இலட்சக்கணக்கான தொப்புள் கொடி உறவுகளான தமிழீழ மக்கள் முள்ளிவாய்க்காலில் அழித்தொழிக்கப்பட்ட இனப் படுகொலை செய்யப்பட்ட நாள். உலகத் தமிழர்களின் துயர் மிகுந்த இந்த நாளில் திரைப்படக் கூத்தாடிகள் குறிப்பாக நடிகர் விசால்காரு தலைமையில் கலை நிகழ்வு என்ற பெயரில் கவர்ச்சி நடிகைகள்,நடிகர்கள் பங்கேற்று குத்தாட்டம் குலுக்கலாட்டம் என கொண்டாட்டத்தை நடத்த நினைக்கிறார்கள் சில கருங்காலி அமைப்புகள்.

தமிழர்களே! தமிழர்களே !

நாம் இதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களும்,தாய்த் தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழர்களும், தமிழ்த் தேசிய அரசியல் இயக்கங்களும் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சியை அன்றைய நாளில் நடக்க விடாமல் தடைச் செய்ய வேண்டும்.
கண்டிப்பாக தமிழக வாழ்வுரிமைக்கட்சி சார்பாக அந்த கல்லூரியை முற்றுகையிடுவோம் என்பதை காவல் துறைக்கு தெரியபடுத்தி விட்டோம்” என்று தெரிவித்து உள்ளார்.

இதைத் தொடர்ந்து tamilankural.com இதழின் சார்பாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டு இருந்த மூன்று எண்களை தொடர்புகொண்டோம். நமது அழைப்பு ஏற்கப்படவில்லை.பிறகு, நடிகர் வி2ஷாலின் உதவியாளராக அறியப்படும் ஹரி என்பரை அழைத்தோம். அவரும் நமது அழைப்பை ஏற்கவில்லை. ஆகவே அவருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினோம். அப்படியும் பதில் இல்லை.

இந்நிலையில் தவெக தலைவர் வேல்முருகன், “உலகத்தமிழர்களின் துக்க நாளான 18ஆம் தேதி அன்று கன்னியாகுமரியில் நடக்கும் நட்சத்திர இசைத் திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும்!” என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில், “கடந்த 2009ஆம் ஆண்டு, தனி ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், சிங்கள பௌத்தவ பேரினவாத அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றது. சிங்களப் பேரினவாத அரசின் அறமற்ற அப்போரில் சுமார் 2.25 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகளில் 40 ஆயிரம் மாவீரர்கள் கொலை செய்யப்பட்டனர்.

அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் துணைக்கொண்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட மே 18ஆம் தேதியை, ஆண்டுந்தோறும் தமிழின அழிப்பு செய்த கருப்பு நாளாக தமிழிழீ தமிழர்கள் மட்டுமின்றி, உலகெங்கும் பரவி வாழும் ஒட்டுமொத்த தமிழர்கள் அனுசரித்து வருகின்றனர்
குறிப்பாக, மே 18ஆம் தேதி அன்று, தமிழ்நாட்டில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும், துக்க நாளை அனுசரிப்பதோடு, வீரமரணமடைந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமாகும்.
இச்சூழலில், கன்னியாகுமரி சிவந்தி ஆதித்தனார் கல்லூரி திடலில், நடிகர் விஷால் உள்ளிட்ட தமிழ் திரைப்பட நடிகர்களை வைத்து, மே 18 அன்று நட்சத்திர இசைத்திருவிழாவை நடத்த இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
மே 18 அன்று, ஒட்டுமொத்த தமிழர்களும் துக்க நாளை அனுசரித்து, தமிழிழீ போரில் உயிரிழந்த போராளிகள் மற்றும் தமிழிழீ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிலையில், அந்நாளை இசைத்திருவிழாவின் வாயிலாக கொண்டாட்ட நாளாக மாற்ற முயலுவது ஏற்புடையது அல்ல.
ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து மே 18ஆம் நாளை தமிழ் இனப்படுகொலை நாளாக அறிவித்து, அதனை கனடா அரசு அனுசரித்து வருகிறது.
ஆனால், தமிழ்நாட்டில் அன்றைய நாளில் கொண்டாட்ட நிகழ்வை நடத்துவது வன்மையாக கண்டிக்கதக்கது.
எனவே, உலகத்தமிழர்களின் துக்க நாளான 18ஆம் தேதி அன்று கன்னியாகுமரியில் நடக்கும் நட்சத்திர இசைத் திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்து உள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

Related Posts