கறுப்பு சிகப்பின் சங்கமமாக ‘வீரவணக்கம்’.. சமுத்திரக்கனி, பரத் கூட்டணியில்!

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி. கிருஷ்ண பிள்ளை அவர்களின் வீர வாழ்க்கை வரலாறு ‘வீரவணக்கம்’ என்கிற திரைப்படமாக உருவாகி வருவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தில் சமுத்திரக்கனி, பரத் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரபல புரட்சி பாடகியும் கேரள மக்களால் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான 95 வயதான பி.கே. மேதினி அம்மாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கிய மலையாள பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘வசந்தத்தின்டே கனல் வழிகளில்’ என்ற காவியத்தின் இரண்டாம் பாகம் தான் வீரவணக்கம்.
படம் குறித்து அவர், “இப்படம், புரட்சி வீரர் பி. கிருஷ்ண பிள்ளை அவர்களின் வீர வாழ்க்கை வரலாறு என்பதோடு, பெரியாரின் வாழ்க்கை தத்துவங்களும் இணைந்த புதுமையான திரைப்படமாக வளர்கிறது. ஒரு தாய் மக்களான தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் ஒரு புது திரை அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.
இத்திரைப்படத்திற்கு எம் கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத்,ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் என ஐந்து இசையமைப்பாளர்கள் ஐந்து அற்புதமான மனதை மயக்கும் பாடல்களை வழங்கியுள்ளனர். . ‘சிம்மக்குரலோன்’ டி. எம். சௌந்தரராஜனின் மகன் டிஎம்எஸ் செல்வகுமார் முதல் முறையாக திரைப்படப் பின்னணி பாடுகராக வீர வணக்கத்தில் அறிமுகமாகிறார்.
இது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், “மீண்டும் டி.எம்.எஸ்ஸே பாடி உள்ளாரோ என எண்ணத் தூண்டும் மனதை உற்சாகப்படுத்தும் புரட்சிப் பாடலை அவர் பாடியுள்ளார். ஆஸ்கார் விருது பெற்ற ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நாட்டு நாட்டு உட்பட 600 பாடல்களுக்கு மேல் பாடிய பாடகர் யாசின் நிசார், கேரளாவின் முன்னணி நாட்டுப்புறப் பாடகர் சி ஜே குட்டப்பன், ரவிசங்கர் மற்றும் சோனியாவும் அருமையான பாடல்களை பாடியுள்ளனர்” என்றார்.
இப்படி, தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் இத் திரைப்படத்தில் கரம் கோர்த்துள்ளனர் என்பதால் விரைவில் வெளியாகயுள்ள வீரவணக்கம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்பொழுது எதிர்பார்ப்பு ஏறத் துவங்கியுள்ளது.