காட்டு மிராண்டித்தனமான செயலால் எம்.ஜி.ஆரின் புகழை அழிக்க முடியாது…சைதை துரைசாமி கண்டனம்

மதுரை வாடிவாசல் அருகே எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்தியதற்கு சைதை துரைசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் வாடிவாசல் அருகே முகம் தெரியாத நபர்களால் எம்.ஜி.ஆர் சிலை தேதப்படுத்தபப்ட்டது. இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது.
தமிழக மக்களின் இதயத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் புரட்சித்தலைவர்,பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் சிலை மதுரை திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதி வாடிவாசல் அருகே சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. ஏழை,எளிய மக்களின் குலதெய்வமாக போற்றப்படுபவர் புரட்சித்தலைவர்.
இன்று கண்ணுக்கு தெரியாத மின்சாரமாக மக்களிடையே வாழ்ந்து வருகிறார். எம்.ஜி.ஆரின் சிலையை உடைப்பதால் அவரின் புகழ் குறையாது. அவர் செய்த சாதனைகளும்,மக்களுக்கு கொடுத்த நம்பிக்கையும் அழியவே அழியாது.
கடவுளுக்கு இணையாக வணங்கப்படும் அவரை அனைத்து இயக்கத்தினரும் தங்கள் பொதுவான தலைவராகவே பார்க்கிறார்கள். இந்த நிலையில்,சிலை சேதப்படுத்தப்பட்டு இருப்பதை தாய்க்கும்,தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாத காட்டுமிராண்டிகளின் செயலாகவே பார்க்கத் தோன்றுகிறது.
கலியுக வள்ளல்,ஏழைகளின் இதய தெய்வம் எம்.ஜி.ஆரின் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். புரட்சித்தலைவர் சிலைக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.