விமர்சனம்: ரத்தம்
தனக்குப் பிடித்த நடிகரை விமர்சித்து எழுதியதால் பத்திரிகையாளரை கொலை செய்கிறார் சினிமா ஹீரோவின் ரசிக(வெறியர்) ஒருவர், தான் சார்ந்த மத விழா ஊர்வலத்துக்கு அனுமதி தராததால் மாவட்ட ஆட்சியரை கொல்கிறார் ஒரு மத வெறியர்..
ஆனால் இந்த கொலைகளுக்கு இன்னுமொரு பின்னணி இருப்பதை உணரும் ஒரு பத்திரிகையாளர், புலனாய்வு செய்ய ஆரம்பிக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா… குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா என்பதுதான் கதை.
ஆத்திரத்தில் அடிக்க வந்தாலும், அன்பால் ஆரத்தழுவ வந்தாலும் ஒரே மாதிரி ரீயாக்சன் காட்டுவார் என்பது தெரிந்த விசயம்தான் என்பதால், ஹீரோ விஜய் ஆண்டனியை விட்டுவிடுவோம்.
நிழல்கள் ரவி , ரம்யா நம்பீசன் உள்ளிட்டோருக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை. ஆனால் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
நந்திதா ஸ்வேதா… அட, அதிரவைத்துவிட்டார்!
பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் கண்ணன் நாராயணன். க்ரைம் த்ரில்லர் படத்துக்கு ஏற்ற ஒளிப்பதிவு.
“வந்தேறினு சொல்லி பிரிப்பாங்க” , “2012லேருந்துதான் மதவெறி குற்றங்கள் அதிகமாச்சு.. அதுவும் 2014லேருந்துதான் தமிழ்நாட்டில் இது கூடுதலாச்சு” என்கிற வசனங்கள் ஈர்க்கின்றன.
இளம்பெண்ணை சீரழித்த அமைச்சர் கதாபாத்திரம்..
அறம்பாவை, செழியன், பாரதி என பல கதாபாத்திரங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்டியிருப்பது..
‘வில்லருக்கு’ பின்கதை (பிளாஷ்பேக்) வைக்காதது.
பெண் குழந்தைகளை உறவுகளே பாலியல் பலாத்காரம் செய்வதை (காட்சிப்படுத்தாமல்) அழுத்தமாக பதியவைத்தது..ரசியல் மூலம் பிரைன்வாஷ் செய்து, ஒருவரை கொலைகாரர் ஆக்குவது ‘சத்யா’ காலத்து கதைதான் என்றாலும், இப்போது சாதி,மத பின்னணியை வைத்தும் இப்படி நடக்கலாம்.. அதற்கு சோசயல் மீடியா ஒரு மீடியமாக இருக்கலாம் என்பதைச் சொன்னது..
– இப்படி இயக்குநர் சி.எஸ்.அமுதனை பாராட்ட சில காரணங்கள் இருக்கின்றன.
ஆனால்..
கிளைமாக்ஸில் “ஹார்ட்டிஸ்குகள் மட்டும் போதும்” என்பது பெத்த பெரிய ஹேக்கரான வில்லருக்கு தெரியவில்லை…
அந்த ஹார்ட் டிஸ்குகளை போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் நுழைந்து, எடுத்து ஹீரோ தப்பிக்கிறார்.. துப்பாக்கிப் பயிற்சி பெற்ற போலீசார் பலர் சுட்டும் ஹீரோ மீது படவில்லை.. குழந்தை இருப்பதாலேயே ‘வில்லரை’ தப்பவிடுகிறார் ஹீரோ..
– இது போன்ற காட்சிகளை, சி.எஸ். அமுதன் தனது, ‘தமிழ் படம் 3’ படத்துக்கு வைத்து இருக்கலாம். ரசித்து சிரித்திருப்பார்கள் ரசிகர்கள்.
முக்கியமாக குறிப்பிட வேண்டியது..
படத்தில் வரும் அதீத மதுக் காட்சிகள்! ஹீரோ உட்கார்ந்து குடிக்கிறார்.. நடந்துகொண்டே குடிக்கிறார்.. குடித்துக்கொண்டே சிந்திக்கிறார்..! இப்படிப்பட்டவரின் மூளையும் வேலை செய்யாது.. உடலிலும் வலு இருக்காது. ஆனால் அதிரி புதிரியாக யோசிக்கும் அவர், அடிதடியிலும் பின்னுகிறார்.
“சரக்கு அடிச்சா பிரைன் நல்லா வேலை செய்யும்.. உடம்பு பலமாகும்” என்கிற தவறான கற்பிதத்தை இளைஞர் மனதில் ஆழப் பதியவைக்கும் இன்னொரு படம் இது.
மது விளம்பரம், குடிக்கும் ஆசையைத் தூண்டி மனிதரை போதைக் குழியில் தள்ளும் என்பதால்தான் விளம்பரம் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனால் குடிக்காமலேயே பித்தம் ஏறும்அளவுக்கு,மதுக்காட்சிகள்.
“மது ஆலை முதலாளிகள், திரைத்துறையினரை பயன்படுத்தி மறைமுக விளம்பரம் செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது” என பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலர், விமர்சித்து உள்ளார்கள்.
இந்த விமர்சனத்தில் இருந்து இனியாவது திரைத்துறை மீள வேண்டும்.