நிழற்குடை: திரைப்பட விமர்சனம்

கத்தி, துப்பாக்கி, ரத்தம்.. இவைகளுக்கு இடையே அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் அழகான திரைப்படங்கள் அவ்வப்போது வருகின்றன. அந்த வகையில் தென்றலாக வந்து இதமாக வீசுகிறது நிழற்குடை.
தலைப்பை தமிழில் வைத்ததற்காகவும் பாராட்டலாம்.
ஈழ இன அழிப்பு போரில், தனது குடும்பத்தையே பறிகொடுத்த ஜோதி, முதியோர் இல்லம் ஒன்றை தலைமையேற்று செயல்படுகிறார். அங்கு வரும் பெரியவர்களை, முடிந்த அளவு அவர்களது பிள்ளைகளிடம் பேசி குடும்பத்துடன் சேர்த்து வைக்கும் பணியையும் செய்கிறார்.
இன்னொரு பக்கம், ஐ.டி.கம்பெனியில் பணியாற்றும் நிரஞ்சன் – லான்சி தம்பதி, தங்களது குழந்தை நிலாவுடன் வசிக்கின்றனர். மதம் மீறிய காதல் என்பதால் இரு குடும்பத்தாருடனும் பிரச்சினை. குழந்தையைப் பார்த்துக்கொள்ள சரியான ஆள் கிடைக்கவில்லை.அந்த நேரத்தில் முதியோர் இல்லத்துக்குச் செல்கின்றனர். அங்கு நிர்வாகி ஜோதியின் அன்பைப் பார்த்து, தங்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்ள அழைக்கின்றனர்.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
முதியோர் இல்லத்தை பொறுப்பேற்று நடத்தும் ஜோதி கதாபாத்திரத்தில் தேவயானி. அவரது முகமும், உடல் மொழியும் பாசமான அந்த கதாபாத்திரத்துக்கு மிகவும் பொறுத்தம்.
குழந்தையிடம் பாசம் காட்டும் பாங்கு, கடத்தல்காரனிடம் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவது, பொறுத்துப் பொறுத்துப் பார்த்து குழந்தையின் பெற்றோரிடம் பொங்குவது என அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் தேவயானி.
ஈழத்தமிழ் பேசத்தான் திணறி இருக்கிறார்.
ஐ.டி. காதல் தம்பதிகளாக வரும் விஜத் – கண்மணி இருவருமே சிறப்பாக நடித்து உள்ளனர். இருவருக்குள்ளும் நடக்கும் ஈகோ யுத்தம், அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட வேண்டும் என்கிற துடிப்பு, குழந்தைக்கு ஆபத்து என்றவுடன் பதறுவது என கதாபாத்திரங்களை கண் முன் நிறுத்துகின்றனர். குழந்தை கதாபாத்திரத்தில்வரும் ஜி.வி. அஹானா அஸ்னி மற்றும் நிஹாரிகா இருவருமே அற்புதமான நடிப்பு.
ஐ.டி. நிறுவன அதிபராக வரும் ராஜ்கபூர், போலீஸ் இன்ஸ்பக்டராக வருகம் இளவரசு, நாயகனின் தாயாக வரும் வடிவுக்கரசி, மருத்துவராக வரும் நீலிமா ராணி உள்ளிட்ட ஒவ்வொருவருமே தங்கள் பாத்திரம் அறிந்து நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு ரசிக்கவைக்கிறது. அபார்ட்மெண்ட் வீடு, அலுவலகம் என சில லொகேசன்கள்தான் என்றாலும் அவற்றை முடிந்தவரை வித்தியாசமான கோணங்களில் காண்பித்து இருக்கிறார்.நரேன் பாலகுமாரின் இசை படத்துக்கு பலம்.
ஹிமேஷ்பாலாவின் வசனம் எதார்த்தம். ரோலெக்ஸின் எடிட்டிங், பின்பாதியில் கச்சிதம். முன்பாதியில் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.
சக மனிதர்கள் மீது.. குறிப்பாக குழந்தைகள் மீது பாசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை சொல்லும் கதை என்றாலும், அதை க்ரைம் த்ரில்லர் போல கொண்டு சென்று கவனத்தை ஈர்க்கிறார் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் சிவ ஆறுமுகம்.
அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.
ரேட்டிங்: 3.1/5