எட்டரை கோடி – 84,700,000 – ரூபாய் பரிசு!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

எட்டரை கோடி – 84,700,000 – ரூபாய் பரிசு!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: ”சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் வழி வகையை வெளிக்கொணரும் தனி நபர்கள் மற்றும் அமைப்புக்கு, 1 மில்லியன் அமெரிக்க டாலர் ( எட்டு கோடியே நாற்பத்தியேழு லட்ச ரூபாய்) பரிசாக வழங்கப்படும்,” என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சிந்து சமவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நுாற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கம், சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில்  துவங்கியது.

இதில், தமிழக தொல்லியல் துறை ஆலோசகர் கா.ராஜன், இணை இயக்குனர் ஆர்.சிவானந்தம் ஆகியோர் எழுதிய, ‘சிந்துவெளி வரி வடிவங்களும், தமிழ்நாட்டுக் குறியீடுகளும்’ என்ற ஆய்வு நுாலை வெளியிட்டு, மூன்று நாள் கருத்தரங்கை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

இந்திய துணை கண்ட வரலாற்றில், நமக்கான இடத்தை நிலைநிறுத்துவது தான், நம்முடைய நோக்கம். ஆரியமும், சமஸ்கிருதமும் தான், இந்தியாவின் மூலம் என்ற கற்பனை வரலாற்றை பலரும் சொல்லி வந்தனர். அதை மாற்றியது ஜான் மார்ஷல் ஆய்வு.

சிந்துவெளி நாகரிகம் ஆரியத்திற்கு முற்பட்டது. அங்கு பேசப்பட்டது திராவிட மொழியாக இருக்கலாம் என, நுாற்றாண்டுகளுக்கு முன் சொன்ன அவரது குரல், இன்று வலுப்பெற்று இருக்கிறது. நன்கு கட்டமைக்கப்பட்ட வளர்ச்சி பெற்ற ஒரு நாகரிகம், சிந்து சமவெளியில் இருந்தது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது நடந்து வரும் அகழ்வாராய்ச்சி, உலக அளவில் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. தமிழக தொல்லியல் துறையால் நடத்தப்படும் அகழாய்வில், தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கீழடி அருங்காட்சியகம் போலவே, பொருநையிலும் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு வருகிறது.

உற்சாகம் தருகிறது

எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி நடக்கிறது. இதன் முடிவுகள், பெரும் உற்சாகத்தை தருவதாக அமைந்துள்ளன.

சிந்துவெளி புதிருக்கு உரிய விடை கண்டுபிடியுங்கள்; ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அறிவித்தார் ஸ்டாலின்

தமிழ் பண்பாட்டை பேணி காப்பது தான், தமிழக அரசின் தலையாய கடமை. இதை உலகுக்கு உணர்த்தும் வகையில், மூன்று முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

 சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை, இன்னும் நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை.

நுாறு ஆண்டுகளை கடந்தும், தீர்க்கப்படாத இந்த புதிரை புரிந்து கொள்ள, உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள், கணினி வல்லுனர்கள் உட்பட பலரும் முயற்சித்து வருகின்றனர்.

அதை ஊக்கப்படுத்தும் வகையில், உரிய விடையை கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் வழி வகையை, தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் மற்றும் அமைப்புக்கு, 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும்

 சிந்துவெளி பண்பாடு குறித்து தொடர் ஆராய்ச்சிகளை, தமிழக தொல்லியல் துறையுடன் இணைந்து, ரோஜா முத்தையா நுாலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி மையம் மேற்கொள்ள, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க, 2 கோடி ரூபாய் வழங்கப்படும்

தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள், கல்வெட்டியல் ஆய்வாளர்கள், நாணயவியல் வல்லுனர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்த, ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

அறிவியல் முறைப்படி, சான்றுகள் அடிப்படையில், தமிழ் சமூகத்தின் தொன்மையை, அறிவுலகம் இப்போது ஏற்றுக்கொள்ள துவங்கி இருக்கிறது.

இந்திய துணை கண்டத்தின் வரலாற்றை, தமிழை தவிர்த்து விட்டு இனி எழுத முடியாது என்று நாம் உரக்கச் சொல்வோம்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன், சேகர்பாபு, தலைமை செயலர் முருகானந்தம், தொல்லியல் ஆய்வு வல்லுனர்கள் கிரெக் ஜாமிசன், ராஜன், நயன்ஜோத் லஹிரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.