“சொல்லாத கதைகளைச் சொல்வேன்!”: தயாரிப்பாளராக மாறிய நடிகர் ஆரவ்!
நடிகர் ஆரவ், படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஆரவ், கலகத் தலைவன், விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துகவனம் ஈர்த்தார். இந்த நிலையில் புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு, இந்த அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது.
இப்போது அந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “AARAV STUDIOS”-இன் துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
AARAV STUDIOS என்பது கதை சொல்லும் கலையின்மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்தும், ஆழமான அன்பிலிருந்தும் உருவானது. விஷுவல் மற்றும் கிரியேட்டிவ் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன், இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.
கடவுளின் அருளும், திரைப்பட ரசிகர்களின் அன்பும் துணையாக, இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன், நன்றியுடன், எங்களின் இந்த சினிமா பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம்” என்று ஆரவ் தெரிவித்து உள்ளார்.

