‘ரத்னம்’ படம் வரை தொடரும் விஷால் – லைகா விவகாரம்!
![‘ரத்னம்’ படம் வரை தொடரும் விஷால் – லைகா விவகாரம்!](https://tamilankural.com/wp-content/uploads/2024/03/Untitled-36.png)
பிரபல நடிகர் விஷாலுக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையேயான வழக்கு, விரைவில் அவரது நடிப்பில் வெளிவர இருக்கும் ரத்னம் படம் வரை தொடர்கிறது.
கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாயை நடிகர் விஷால் தனது பட நிறுவனத்துக்காக கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், லைகா நிறுவனத்தை அணுகி, தனது கடனை அடைக்குமாறு விஷால் கோரியதாக தெரிகிறது. அதன்படி, லைகா நிறுவனம் அன்புச்செழியனுக்கு பணத்தை செட்டில் செய்தது. அந்த பணத்தை லைகாவுக்கு திருப்பிச் செலுத்தும் வரை விஷாலின் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையையும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக விஷால் தரப்பு உத்தரவாதம் அளித்துள்ளது.
ஆனால், உத்தரவாதத்தை மீறி “வீரமே வாகை சூடும்’ பட வெளியீட்டு முயற்சி நடந்ததால், விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் விஷாலுக்கு எதிராக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு பிறப்பித்தார். இதை, இரு நீதிபதிகள் அமர்வும் உறுதிசெய்தது. இந்த இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விஷால் தரப்பில் சண்டகோழி-2 பட ஒப்பந்த விவகாரத்தில் லைகா நிறுவனம் ஜி.எஸ்.டி. தொகையை செலுத்தாமல் இருப்பதாகவும், அதனால், லைகா நிறுவன சொத்துகளை முடக்கக் கோரி, வழக்கு தொடர்ந்துள்ளதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தனக்கும்- லைகா நிறுவனத்திற்கும் இடையே நடைபெற்ற பண பரிவர்த்தனை குறித்த ஆய்வுக்கு கணக்கு தணிக்கையாளரை நியமிக்க வேண்டுமெனவும் விஷால் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஷால் நடித்து வெளி வர இருக்கும் ரத்னம் படத்தின் சம்பளத்தின் ஒரு பகுதியை கடனாக லைகாவுக்கு திருப்ப செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்னும் தொடர்கிறது. ஆக, விஷால் – லைகா பண விவகாரம் ரத்னம் பட சம்பளம் வரை தொடர்கிறது.
இந்த பிரச்சினை எப்போது முடியும்.. இதனால் ரத்னம் பட வெளியீட்டுக்கு பிரச்சினை ஆகிவிடக்கூடாது என்று சினிமா ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். நமது எதிர்பார்ப்பும் அதுதான்.