விமர்சனம் : பாயும் ஒளி நீ எனக்கு

விமர்சனம் : பாயும் ஒளி நீ எனக்கு

கார்த்திக் அத் வைத் இயக்கத்தில், விக்ரம் பிரபு, வாணி போஜன், தனஞ்செயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், பா.ஒ.நீ.எ.

சிறு வயதில் ஏற்பட்ட விபத்தால் கண்பார்வையில் குறைபாடு கொண்டவராக இருக்கிறார் விக்ரம் பிரபு. மிக அதிக வெளிச்சம் இருக்கும் போதுதான் அவருக்கு கண் தெரியும். தனது வளர்ப்பு அப்பாவை சில காரணங்களுக்காக ஒரு கோஷ்டி கொன்று விட, தனது குறைபார்வையை வைத்து கொண்டு தனது அப்பாவை கொன்றவர்களை அரவிந்த் பழி வாங்குவதுதான் கதை.

கேட்பதற்கு வித்தியாசம் இருக்கும் இந்த கதை திரையில் முதல் பாதி சாதாரணமாக நகர்கிறது. இரண்டாவது சிறிது பாதியில் வேகம் எடுக்கிறது. எடுத்துக்கொண்ட கதைக்கு ஏற்ப ஆழமான, நுட்பமான திரைக்கதை இல்லாததால், விறுவிறுப்பு குறைவாக உள்ளது.

முழு படத்தையும் தாங்கி பிடிப்பது விக்ரம் பிரபுதான். பார்வை குறைபாடு உள்ளவராக மிக நன்றாக நடித்துள்ளார். அப்பாவை காப்பாற்ற முடியாமல் போகும் போது ஆற்றாமை, காதலில் பொறுமை, ஆக்ஷனில் வித்தியாசம் என ஒரு மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார்.

வாணி போஜன் ஒரு அமைதியான காதலியாக வந்து போகிறார். வில்லன் தனஞ்செயா  கொஞ்சம்(!) நடிக்கிறார்.

ஸ்ரீதரின் ஒளிப்பதிவு பார்வை குறை உள்ளவரின் பார்வையில் பல காட்சிகளை படம் பிடித்து  வித்தியாசமான அனுபவத்தை அளிக்கிறது.  சாகர் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.

திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படத்தை ரசித்திருக்க முடியும்.

 

Related Posts