நூறாண்டு ஆரோக்கியமாய் வாழ!:சைதையார் சொல்லும் வழிகள்…
மனித நேயச் செம்மல் சைதை சா. துரைசாமி, சென்னை பெருநகர முன்னாள் மேயர் அவர்களின் வள்ளல் தன்மை அனைவரும் அறிந்ததே. அவர் தனது, மனிதநேயம் அறக்கட்டளை மூலமாக, ஏழை எளிய மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி.மற்றும் அரசு தேர்வில் வெற்றி பெற இலவச பயிற்சி அளிப்பதும் நமக்குத் தெரியும்.
வள்ளல், நேர்மையான அரசியல் பிரமுகர், சிறந்த நிர்வாகி… என அவரது முகங்கள் நாம் அறிந்ததே.
அந்த அவரது முகம் ஆக பொலிவுடனும், இளமைத் துடிப்போடும் செயல்பட காரணம் தெரியுமா.?.
இயற்கை வழியிலான அவரது வாழ்க்கை முறைதான்..
குறிப்பாக, அவரது உணவு முறை மிகச் சிறப்பான ஒன்று.
அவற்றில் ஒன்றை அவர் தெரிவித்துள்ளார்:
“முறையான வாழ்க்கையால் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் நமது சித்தர்கள். அவர்களின் கூற்றுப்படி. மொத்தம் 108 கல்பங்கள் உள்ளன. இவற்றைச் சாப்பிடுவதால் நோய் விலகும், பிற்காலத்தில் நோய் வராமல் தடுக்கும். குறைந்த பட்சம், அறுபது காயகல்ப முறைகளையாவது பின்பற்ற வேண்டும்.
இவற்றிலும் முத்தமிழ் போல, முத்தான மூன்று கல்பங்கள் உண்டு.
இவற்றை முறையாக பயன்படுத்தினால், உடல் வலுவாகும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
இந்த மூன்றும் எளிதில் கிடைக்கக்கூடியவை தான். அவை, இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகியவை ஆகும்.
அதிலும், கடுக்காய் இன்னும் சிறப்பு வாய்ந்தது.
`உடல், மனம், ஆன்மாவை தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உள்ளது’ என்று தெரிவிக்கும் திருமூலர் அதை `அமுதம்’ என்கிறார்.
இப்போது, இந்த மூன்று கல்பங்களையும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சித்தர்கள் கூறுவதைப் பார்ப்போம்.
‘காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, இரவில் கடுக்காய் மண்டலம் சாப்பிட கோலூன்றி நடந்தவன் கோலை வீசி நடப்பான் மிடுக்காய்’ என்கிறார்கள் நமது சித்தர் பெருமக்கள்.
காலை:
இஞ்சியை நன்கு கழுவி, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி மையாக அரைக்க வேண்டும். அரைத்த விழுதை பிழிந்து, சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி படியவிட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தெளிந்த நீரை மட்டும் வடிகட்டிக்கொள்ள வேண்டும். பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும் வெள்ளை நிற நச்சுப்பொருளை அகற்றிவிட வேண்டும்.
இந்த தெளிந்த இஞ்சிச் சாற்றை அருந்துங்கள்.
சுக்கு
சுக்கு பொடி எளிதில் கிடைக்கும். இதை சாதத்தில் போட்டு, நான்கு கவளம் எண்ணெய் அல்லது நெய் விட்டு சாப்பிட வேண்டும்.
கடுக்காய்:
இரவில் உறங்கச் செல்லும் முன், விதை நீக்கிய கடுக்காயைத் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து அருந்த வேண்டும்.
இது குறித்து அறியாதவர்கள், இந்த புத்தாண்டில் இருந்தாவது இந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்று எளிய செயல்களைச் செய்தால் போதும். நூறாண்டு நூறாண்டு ஆரோக்கியத்துடன் வாழலாம்.இந்த புத்தாண்டில் ஒவ்வொருவரும் தங்களது உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
– இவ்வாறு சைதையார் தெரிவித்து உள்ளார். இதை அனைவரும் கடைப்பிடித்து இயற்கையுடன் இணைந்து ’உணவே மருந்து’ ’மருந்தே உணவு’…. என்பது போல் புத்தாண்டு சபதமாக ஆரோக்கியத்துடன் நீடு வாழ்வோம்.
– டி.வி.சோமு
