திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 6

திருப்ப்பாவை பாடல் 6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: பிரியமான தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகளின்  கீச்சிடும் ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட பெருமாள் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லை…! தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவன். சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ண பிரானை யோகிகளும், முனிவர்களும் ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உனக்கு கேட்கவில்லை? உடனே எழுந்திரு இந்த ஒலிகளைக் கேட்டு மனம் மகிழ்வாய். தன்னை கொல்ல வந்த அரக்கியை அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல்  அமைதியாக  உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் என்று ஆண்டாள் இந்தப் பாடலைப் பாடியதாக கூறுகின்றனர்.

திருவெம்பாவை பாடல் 6

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

பொருள்: மான் போன்ற நடையை கொண்ட பெண்ணே! நேற்று நீ எங்களிடம், நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன் என்று கூறினாய். ஆனால், இன்று நாங்கள் தான் உன்னை எழுப்புகிறோம். நீ சொன்ன வார்த்தை எந்த திசையில் போனது? நீ சொன்னதைச் செய்யவில்லை என்று வெட்கப்பட்டாயா இல்லயா? உனக்கு இன்னுமா விடியாமல் இருக்கிறது?

வானவர்களும், பூமியில் இருப்போரும், பிற உலகில் இருப்பவர்களும் அறிந்து கொள்ள முடியாத சிவபெருமானின் திருவடிகளைப் வணங்கும் எங்களுக்கு இன்னும் பதில் கூறாமல் இருந்தால்? அவனை உடலும் மனதாலும் நினக்காமல் இருப்பது நீ மட்டுமே. எங்களுக்கும் மற்றவர்களுக்காகவும் நீயும் புகழ்ந்து பாடு என கூறுகிறாள்.

இறைவனை நமக்காக மட்டும் அல்லாது பிறருக்காகவும் வணங்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது இப்பாடல்.