திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 9

திருப்பாவை பாடல் 9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பொருள்: அழகாக ஒளிரும்  நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிழும் விளக்கெரிய, நறுமணம் வீசம், அதைப் பார்த்தாலே தூக்கம் வரும். அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! நீ அவளை எழுப்பு. உன் மகளை நாங்கள் வேகுநேரமாக அழைக்கிறோம்!  அவள் இன்னும் பதிலே சொல்லவில்லை! அவள் என்ன  ஊமையா? செவிடா?  சோம்பல் அவளை சொந்தமாக்கி விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா?  உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்யும்,மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்ல வா என அழைக்கிறாள்.

திருவெம்பாவை பாடல் 9

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

பொருள்: பல கோடி வருடங்களுக்கும் முன்பான பழமையான பொருள் இது என்று சொல்லப்படும் பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே! இன்னும் லட்சம் ஆண்டுகள் கழித்தும் இந்த உலகம்  இப்படித்தான் இருக்கும் என்று கணிக்கப்படும் புதுமைக்கெல்லாம் புதுமையான சிவபெருமானே! உன்னை முதல்வனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு மட்டுமே பணிவோம்.

 அவர்களுக்கே பணி செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களை மட்டுமே எங்களுக்கு கணவராக வர வேண்டும்.  அவர்கள் கூறும் வார்த்தைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாகக் கருதி, பணி செய்வோம். இந்த பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையை அடைவோம்.

செல்வந்தரால் நிம்மதியைத் தர இயலாது. பக்திமான்களை மணந்தால் எளிய வாழ்க்கை வாழலாம்.

 ஆனால், அதில் இருக்கும் மனநிம்மதி யாருக்கு கிடைக்காது. என்பது இந்தப் பாடலின் பொருள்.