திருப்பாவை பாடல் 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.


பாடலின் பொருள்: பெண் குழந்தைகளே! அந்த எம்பெருமாள் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தனதாக்கிக்கொண்டான். அவனது பெருமைகளைப் பாடி, நம் பாவைக்கு மலர்கள் சூட்டி வணங்குவதற்கு முன் நீராடிவிட்டு வரலாம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும்.

 மழை பெய்தால் வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் நமக்கு கொடுக்கும்.

திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் பற்றிப் பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதங்கள் பட்டால் மோட்சம் கிடைக்கும். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள் ஆண்டாள்.

திருவெம்பாவை பாடல் 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை

இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்

விளக்கம்; அழகாக முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! முந்தய  ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே எழுந்து கொள்வாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் மகிழ்வாக அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது நீண்ட நேரம் எழுப்பியும் எழுந்திடாமல் இருக்கிறாய் கதவைத் திற என்று அழைக்கின்றனர்..

தூங்கிக் கொண்டிருந்த தோழியோ, “”ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச பேசலாமா? கடவுள் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள்.  உங்களைப் போன்று  எனக்கு விரதமிருந்ததில் அனுபவம்கிடையாது. மேலும், நான் இந்த பக்திக்கு புதியவள்.   என் தவறைப் பெரிதுபடுத்தலாமா! என்று  வருந்திச் சொல்கிறாள்.

அழைக்க வந்த தோழியர் அவளிடம், “”அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்று கூறுகின்றனர்.