பீட்சா-4 குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் சி.வி. குமார்

பீட்சா-4 குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் சி.வி. குமார்

தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள பீட்சா வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் சி.வி. குமார் அறிவித்துள்ளார்.

தரமான திரைப்படங்கள் மற்றும் தேடல் உள்ள திறமைகளின் தாயகமான தனது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மூலம் சி.வி. குமார் தயாரித்த பீட்சா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘பீட்சா 2 வில்லா’ மற்றும் ‘பீட்சா 3: தி மம்மி’ திரைப்படங்களும் தொடர் வெற்றியை பெற்றன.

மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஷ்வின் காக்குமனு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பீட்சா 3: தி மம்மி’ ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு உலகெங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, ‘பீட்சா’ திரைப்பட வரிசையின் நான்காம் பாகம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தயாரிப்பாளர் சி.வி. குமார் அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “பீட்சா மூன்று பாகங்களின் வெற்றி ‘பீட்சா’ வரிசையின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அபிமானத்தையும் தரமான உள்ளடக்கத்தை என்றுமே அவர்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் தொடர்ந்து அளித்து வருகிறது. எனவே அவர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘பீட்சா’ நான்காம் பாகம் விரைவில் தொடங்கும். இதன் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்,” என்று கூறினார்.

Related Posts