நாடாளுமன்றத்தில் தரம் தாழ்ந்த பேச்சு: பாஜக எம்.பி.க்கு நோட்டீஸ்

நாடாளுமன்றத்தில் தரம் தாழ்ந்த பேச்சு: பாஜக எம்.பி.க்கு நோட்டீஸ்

புதுடெல்லி: மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலிக்கு எதிராக தகாத வார்த்தைகள் பேசியது தொடர்பாக பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரிக்கு கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களவையில் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்து விவாத நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி குறுக்கிட்டார். அவரை தீவிரவாதி என்றும் தகாத வார்த்தைகளாலும் தெற்கு டெல்லி பாஜக எம்.பி ரமேஷ் பிதூரி விமர்சித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையானது.

இந்த விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வருத்தம் தெரிவித்தார். அந்த வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுமாறு அவைத் தலைவருக்கு கோரிக்கை விடுத்தார்.

அந்த வார்த்தைகளை ஏற்கெனவே அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக அவையை நடத்திய காங்கிரஸ் எம்.பி. கே.சுரேஷ் தெரிவித்தார்.

எனினும் ரமேஷ் பிதூரியை அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் உள்ளிட்டோரும் இதே கருத்தை வலியுறுத்தினர்.

பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி கூறும்போது, “எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். சபாநாயகர் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிடில் அவைக்கு வராமல் இருப்பது குறித்து யோசித்து வருகிறேன். எனென்றால் இது போன்ற செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது” என்றார்.

இந்நிலையில் மக்களவையில் பேசியது தொடர்பாக ரமேஷ் பிதூரிக்கு, சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி பாஜக நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.