லிங்கபைரவி தைப்பூசத் திருவிழா’’ நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

கோவை; ஈஷா லிங்கபைரவியில் தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 8 மிக கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான மக்கள் தேவியை தரிசனம் செய்து அவளின் அருள் பெற்றனர்.

பெண் தன்மையின் தெய்வீக அம்சமான லிங்கபைரவியில் நவராத்திரி மற்றும் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 8 கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நூற்றுக்கணக்கான பெண்கள் கள்ளிப்பாளையத்தில் இருந்து முளைப்பாரி சுமந்து வந்தனர். அதனுடன், முளைப்பாரியிலேயே லிங்கபைரவி தேவியின் உருவம் வடிவமைக்கப்பட்டு, தேரில் வைத்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். காலை 6 மணிக்கு கள்ளிப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் நண்பகல் 12 மணியளவில் லிங்கபைரவியை வந்தடைந்தது.

வரும் வழியில் ஆலந்துறை, மத்வராயபுரம், இருட்டுப்பள்ளம், காந்தி காலனி, செம்மேடு, முட்டத்துவயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அங்குள்ள கிராம மக்கள் ஊர்வலத்தை வரவேற்று தேவியின் அருளை பெற்றனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கடந்த 21 நாட்கள் சிவாங்கா விரதம் மேற்கொண்டனர். அவர்கள் அனைவரும் லிங்கபைரவிக்கு வந்து தேங்காய், தானியங்கள், எள் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தங்களது விரதத்தை நிறைவு செய்தனர். நூற்றுக்கணக்கானோர் மா விளக்கு ஏற்றியும் அர்ப்பணிப்பு செலுத்தினர்.

மாலை 5.40 மணி முதல் 6.40 மணி வரை லிங்கபைரவியில் பெளர்ணமி பூஜையும், 7 மணியளவில்,  தேவியின் உற்சவ மூர்த்தி 7 மணியளவில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, நந்தி முன்பாக மஹா ஆரத்தியும் நடந்தது. இரவு 8 மணியளவில் ஆதியோகி திவ்ய தரிசனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று லிங்கபைரவியின் 10-ம் ஆண்டு பிரதிஷ்டை தினம் என்பது குறிப்பிடத்தக்கது.