இங்கு மிருகங்கள் வாழும் இடம் விமர்சனம்

இங்கு மிருகங்கள் வாழும் இடம் விமர்சனம்

இளம் பெண்களை ‘காதல்’ பெயரில் மயக்கி, அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் கொடுமையையும், அதற்கான தண்டனையையும் எதார்த்த படமாக அளித்து உள்ளனர்.

மனைவி இழந்த நிலையில் மகளை அக்கறையும், அன்புமாக வளரத்து கல்லூரி வரை படிக்க வைக்கிறார், பாசத் தந்தை பைன்ஜான்.

மகள் ஸ்ரீதேவி உன்னி கிருஷ்ணன், காதல் வயப்படுகிறார். அவரை காதலிப்பதாய் நடிக்கும் நடிக்கும் இளைஞன், தன் நண்பர்களுடன் சேர்ந்து  ஸ்ரீதேவி உன்னி கிருஷ்ணனை சீரழிப்பதோடு கொலையும் செய்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர்  சோரன் ராஜ், குற்றவாளிகளைப் பிடித்து காவல் நிலையத்துக்குக் கொண்டு வருகிறார். ஆனால் அவர் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார். சாட்சிகள் கலைக்கப்படுகின்றன. குற்றவாளிகள் விடுவிக்கப்படுகிறார்கள்.

இதனால், அப்பா பைன்ஜான்  வெகுன்டெழுகிறார்.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

வளர்ந்த பெண்ணின் தந்தையாக வரும்ஃபைன்ஜான், பாசமான தந்தையை கண்முன் நிறுத்துகிறார். மகள் தன் பெயரைச் சொல்லி அழைக்கும்போது வெளிப்படுத்தும் பாசம், மகளுக்காக அனைத்தும் செய்யும் அன்பு, மகள் சீரழிக்கப்பட்டதை அறிந்து கலங்கி கதறுவது, பிறகு வெறி கொள்வது என்று பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார். அதிலும் இறுதிக் காட்சி எதிர்பாராத அதிர்ச்சி.  சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தி உள்ளார் ஃபைன் ஜான்.

மகளாக வரும் உன்னி கிருஷ்ணனும் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளார். தந்தையிடம் காட்டும் பாசம், தன்னை காதலிப்பதாகச் சொல்லி வருபவனை லந்து செய்து அனுப்புவது,  நம்பி வந்தவன் மோசம் செய்தவுடன் குமுறுவது என சிறப்பான நடிப்பு.

மற்ற கதாபாத்திரங்களில் தோன்றும் சேரன்ராஜ், லவ்லி ஆனந்த், அஸ்மிதா, கோலிசோடா ஐஸ்வர்யா  உள்ளிட்டோரும் இயல்பான நடிப்பை அளித்து உள்ளனர்.

நாயகனின் இள வயது தோற்றத்தில் வரும் சிறுமியும் முகபாவங்களில் அசத்துகிறார். (இருவருக்குமான முக அமைப்பு ஒற்றுமை ஆச்சரியம்… படக்குழுவின் தேடுதலுக்கு பாராட்டுகள்!)

வித்யாஷரன் இசையில் பாடல்கள் ( அதிலும் ஆரிரோ), பின்னணி இசை அற்புதம். திருவாசகத்தையும் பாடல்களில் கொண்டு வந்திருக்கிறார்கள். பாடலாசிரியர்கள்  எம்.மாணிக்கம், எம்.மதிவாணன் ஆகியோருக்கு  பாராட்டுகள்.

சந்திரன் சாமியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். சண்டைக் காட்சிகளில் அனல் அடிக்கின்றது. சண்டை பயிற்சியாளர் ‘இடி மின்னல்’ இளங்கோ அதிரடி காண்பித்து இருக்கிறார்.

கர்த்தரை வணங்கிவிட்டுச் செல்லும் பெண் ஆபத்தில் சிக்குவது போன்று அமைத்திருந்த காட்சி சிறப்பு. என்னதான் கடவுள் நம்பிக்கை இருந்தாலும், மனிதர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்  என்பதை சிறப்பாக உணர்த்தி இருக்கிறார்கள்.

பெண்களை போகப்பொருளாக மட்டும் பார்த்து பலாத்காரம் செய்யும் சில வன்கொடுமை இளைஞர்களுக்கு சரியான பாடம் கொடுத்து இருக்கிறார் எஸ்.சசிகுமார்.

முதல் படத்திலியே வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து தயாரித்ததோடு நடிக்கவும் செய்திருக்கும் பைன்ஜானுக்கும் பாராட்டுகள்.

(முக்கிய குறிப்பு: ‘இது மிருகங்கள் வாழும் இடம்’ அல்லது ‘இங்கு மிருகங்கள் வாழ்கின்றன’ என்றுதான் தலைப்பு இருக்க வேண்டும். அடுத்தடுத்து பைன்ஜான் தயாரிக்கும் இடத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். வாழ்த்துகள்!)

Related Posts