காயத்ரி மந்திரம் இங்கு தான் உருவானது… யாதவ ராமன்
![காயத்ரி மந்திரம் இங்கு தான் உருவானது… யாதவ ராமன்](https://tamilankural.com/wp-content/uploads/2024/07/BrahmaPushkarGurjarPilgrimage.jpg)
படைக்கும் கடவுளாக போற்றப்படும் பிரம்மாவிற்கு என்று தனிக் கோயில்கள் இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கின்றன. அதில் முக்கியமாக கூறக்கூடிய தனி சிறப்பு மிக்க கோவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் புஷ்கரில் பிரமாண்டமாக அமைந்துள்ளது பிரம்மா கோயில்.
இந்த கோவில் பற்றி அதன் தல வரலாறு பற்றியும் ஆன்மீகவாதி யாதவ ராமன் அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். நான் 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் நிறைய கோவில்களுக்கு சென்று இருக்கிறேன். எந்த கோவிலுக்கு சென்றாலும் அதன் தல வரலாறு பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் தெரிந்து கொள்வேன். அப்படித்தான் புஷ்கர் சென்று இருந்தேன்.
விஸ்வாமித்திர மகரிஷியால் ஏற்படுத்தப்பட்ட புஷ்கர் பிரம்மா கோயில், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில். தற்போது இருக்கும் ஆலயம் 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என கூறுகின்றனர். இந்த கோயில் புஷ்கர் நகரின், `புஷ்கரணி’ எனும் புனித குளத்தின் அருகே அமைந்திருக்கிறது.
இந்த கோயில் உருவானது எப்படி?
அதன் வரலாறு பற்றி பார்க்கலாம். பத்மபுராணக் கதையி்படி வஜ்ரனபா என்ற அசுரன் இருந்தான். பிரம்மா தனது தாமரை மலரால் அவனை வதம் செய்தார். தாமரை மலரிலிருந்து இதழ்கள் கீழே உதிர்ந்தது அப்படி உதிர்ந்த இடம் எல்லாம் புஷ்கர் ஏரி, மத்திய புஷ்கர் ஏரி, கனிஷ்ட புஷ்கர் ஏரி என்ற மூன்று தீர்த்தங்களாக உருவானது.
புனிதமான புஷ்கர் பகுதியில் பிரம்மா உலக நன்மைக்காக யாகம் நடத்தினார். யாகத்திற்கு எந்த விதமான இடையூறு வராமல் இருக்க மலைகளை கொண்டு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினார். வடக்கில் நீலகிரி மலை, தெற்கில் ரத்னகிரி மலை, கிழக்கில் சூர்யகிரி மலை, மேற்கில் சோன்சூர் ஆகிய மலைகளை கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தார்.
யாகம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. யாகத்தில்பிரம்மாவின்மனைவியானசரஸ்வதிதேவிஇருக்க வேண்டும். ஆனால்அவர் இல்லாததால் தோழிகளிடம் சொல்லி அழைத்து வரச் சொன்னார்கள்.
அவர் வர தாமதம் ஆனதால் யாகம் தடைபடக் கூடாது என நினைத்த பிரம்மா. அங்கிருந்த ‘குஜ்ஜர்’ இனத்தைச் சேர்ந்த காயத்ரி என்ற கன்னிப் பெண்ணை திருமணம் செய்து யாகத்தை முடித்தார்.
யாகம் நடந்த இடத்திற்கு வந்த சரஸ்வதி தேவி தான் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொரு பெண்ணை பார்த்ததும் பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். அவருக்கு இங்கு தவிர வேறு எங்கும் கோவில் இருக்கக்கூடாது. மேலும் ‘திருமணமான ஆண்கள் இவரை இங்கு வந்து வழிபட்டால் அவர்களுக்கு தோஷம் ஏற்படும் என்று. ஆனால் சரஸ்வதி சாபத்தை மாற்றி அமைத்தார் காயத்திரி தேவி.’புஷ்கரில் வந்து வழிபடும் ஆண்களுக்கு எந்த தோஷமும் ஏற்படாது’ என்றும்.
இதனால் கோபமான சரஸ்வதி தேவி அந்த இடத்திலிருந்து வெளியேறினால். பிறகு ரத்னகிரி மலையில் நீரூற்றாகி ‘சாவித்ரி ஜர்னா’ என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு தனிக் கோயில் அமைக்கப்பட்டது என்று புராணம் கூறுகிறது.
பிரம்மா கோயில் பின்புறத்தில் இருக்கும் மலையின் மீது சரஸ்வதி தேவியின் கோவில் அமைந்திருக்கிறது. பின்னாலில் சினம் தணிந்த சரஸ்வதி தேவி பிரம்மாவுக்கு இங்குதான் காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார் என்று புராணம் கூறுகிறது.
ஆகவே காயத்ரி மந்திரம் புஷ்கரில் குடிகொண்டிருக்கும் பிரம்மா கோவிலில் இருந்து தான் உலகமெங்கும் பரவியது என்றார் யாதவ ராமன்.
மீண்டும் அடுத்த ஆன்மீக தகவலுடன் சந்திக்கலாம்.
– யாழினி சோமு