தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ கவனம் ஈர்த்த ட்ரெய்லர்

தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ கவனம் ஈர்த்த ட்ரெய்லர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.‘ சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார்.

சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இப்படத்தில் நடித்து வந்த அவருக்கான படப்பிடிப்பு ஜூலை 19-ம் தேதியுடன் நிறைவடைந்தது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

துப்பாக்கி, தோட்டா, தெறிக்கும் ரத்தம், வெடிக்கும் குண்டு,  கருணையில்லா கொலைகள் எல்லாமே அப்படியே அருண் மாதேஸ்வரன் ஸ்டைல். ஆனால் அவரின் முந்தைய படங்களில் இல்லாத வகையில் ஆதிக்கத்துக்கு எதிரான மக்களின் குரலாக இப்படம் இருக்கும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. ஜி.வி.பிரகாஷின் சவுண்ட் மிக்சிங் அட்டகாசம்.

‘நீ யாரு… உனக்கு என்ன வேணும்ங்குறத பொறுத்து, நான் யாருங்குறது மாறும்’ என தனுஷ் பேசும் வசனமும், கடைசியில் வரும் சிங்கம் – ஓநாய் கதை கவனம் பெறுகிறது.நிறைய கதாபாத்திரங்கள் வந்து செல்கின்றன. தனுஷின் இளம் வயது தோற்றமும், ப்ரியங்கா மோகனின் இரு வேறு தோற்றங்களும் படம் ஃப்ளாஷ்பேக் கதைகளை உள்ளடக்கியிருப்பதை உணர்த்துகிறது. ட்ரெய்லர் கட்ஸும், மேக்கிங்கும் படத்தின் மீதான ஆர்வத்தை கூட்டுகிறது.

இருந்தபோதிலும், ட்ரெய்லர் பார்த்து முடித்து விட்டு நம் காலுக்கடியில் ஏதேனும் துப்பாக்கியின் தோட்டா இருக்கிறதா என்பதை தேட வேண்டியிருக்கும் நிலையில், திரையரங்கில் அத்தனை தோட்டாக்களிடமிருந்து பார்வையாளர்கள் எப்படி தப்பிப்பார்கள் என்ற வருத்தம் தான் மேலோங்கியிருக்கிறது.

Related Posts