அமீர் விமர்சித்த நிலையிலும் ‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்து பாராட்டிய லைக்கா சுபாஸ்கரன்

அமீர் விமர்சித்த நிலையிலும் ‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்து பாராட்டிய லைக்கா சுபாஸ்கரன்

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்து நேற்று (மே-10 ) வெளியாகியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. ஆன்டி இண்டியன் படத்தை தயாரித்த மூன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் இமான் அண்ணாச்சி, சரவண சக்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

அரசியல் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதால் படம் குறித்து ரிலீசுக்கு முன்பிருந்தே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. தற்போது படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது

இந்த நிலையில் தற்போது லைக்கா புரொடக்ஷன்ஸ் திரு. சுபாஸ்கரன் லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படத்தை பார்க்க விரும்புவதாக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆதம்பாவாவிடம் மின்னஞ்சல் மூலமாக செய்தி அனுப்பினார்

இதனைத் தொடர்ந்து லண்டனில் அவருக்காக சிறப்பு காட்சி ஒன்று திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் திரு. சுபாஸ்கரன்.

திரு. சுபாஸ்கரன் தானாகவே முன்வந்து ‘உயிர் தமிழுக்கு’ படத்தை பார்க்க விரும்பியதும் படம் பார்த்துவிட்டு பாராட்டியதும் மிகவும் ஆரோக்கியமான விஷயம் என்று கூறினார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆதம் பாவா.