தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு: கர்நாடக பாஜக போராட்டம்

தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு: கர்நாடக பாஜக போராட்டம்

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மாநிலம் தழுவிய போராட்டத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது.

தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசுக்கு உத்தரவிரப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம், நிராகரித்தது.

இந்நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மாநிலம் தழுவிய போராட்டத்தில் பாஜக ஈடுபட்டது. பெங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை, “கர்நாடகாவில் போதுமான மழை பொழியவில்லை. இந்த நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்குவது கர்நாடகாவின் நலனுக்கு எதிரானது.  கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி கர்நாடகாவுக்கே சொந்தம். இது தமிழகத்தின் சொத்து அல்ல. இருந்தபோதும், அவர்கள் காவிரி நீரை பெற்று வருகிறார்கள். கர்நாடகா அணைகளைக் கட்டியதால்தான் தமிழகத்துக்கு தற்போது தண்ணீர் திறக்க முடிகிறது” என்று தெரிவித்தார்.

மாண்டியாவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் சி.டி. ரவி, “இண்டியா கூட்டணியை வலுப்படுத்தவே கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கிறது” என குற்றம் சாட்டினார்.

கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பினரும் , விவசாய சங்கத்தினரும் போராட்டம் நடத்தினர்.

முழு அடைப்பால் மாண்டியா மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் போக்குவரத்து குறைவாகவே உள்ளது.  அசம்பாவித சம்பவங்கள் நேராமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தவிர பெங்களூரு, மைசூரு,  ராம்நகர், சாம்ராஜ்நகர்  உள்ளிட்ட  இடங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டங்கள் காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Related Posts