“நம்பிக்கையே பலம்!”: ‘டெக்ஸ்லா’ விழாவில் ஐஸ்வர்யா ரஜினி!

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் – சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சானமூடு, ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.

இப்படத்தின் அறிமுக வீடியோ காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதன் அதிகாரப்பூர்வமான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

 தயாரிப்பாளர் கண்ணன் ரவி: “சினிமாவிற்கு நான் எல்கேஜி தான்!”

“பொதுவாகவே மேடையில் பேசுவது எனக்குச் சற்று அச்சத்தையும் தயக்கத்தையும் தரும். அதிலும் எனக்கு முன்னால் சினிமாவின் சிற்பிகளும் பிரம்மாக்களும் அமர்ந்திருக்கும்போது அந்தத் தயக்கம் அதிகமாகிறது. பிசினஸ் என்று வந்துவிட்டால் நான் தலைக்கனத்துடன் (கெத்தாக) பேசுவேன், ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை நான் இன்னும் எல்கேஜி (LKG) தான்.

தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் குடும்பத்துடன் இணைந்து பணியாற்றுவதை ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவ்வளவு அன்பாகவும் கனிவாகவும் இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அதேபோல் என் சகோதரர் சுராஜ் வெஞ்சாரமூடு உடன் 8 படங்களில் இணைய வேண்டிய வாய்ப்பு தவறிப்போனது, இப்போது ‘டெக்ஸ்லா’ மூலம் அது அமைந்திருக்கிறது.”

  சீமான்: “சினிமா மீது அவர் வைத்திருக்கும் பேராசை!”

“ஒரு நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம். தயாரிப்பாளர் கண்ணன் ரவி ஒரே நேரத்தில் 16 திரைப்படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இது அவர் சினிமா மீது வைத்திருக்கும் பெரும் காதலையும் பேராசையையும் காட்டுகிறது.

சமீபத்தில் அவரது தயாரிப்பில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் இந்தப் படமும் அமைய வேண்டும். ஒரு வெற்றி என்பது பலருடைய வாழ்க்கையில் கொண்டாட்டமாக மாறும். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கடுமையான உழைப்பால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என வாழ்த்துகிறேன்.”

  இயக்குநர் பாலா: “பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரம்!”

“என்னுடைய முதல் வாழ்த்து என் தங்கை ஐஸ்வர்யாவிற்கு. அடுத்து அவருக்கு வாய்ப்பளித்த கண்ணன் ரவிக்கு. அவர் 16 படங்களைத் தயாரிப்பதன் மூலம் 1600 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் வழங்கியிருக்கிறார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தயாரிப்பதில் அவர் காட்டும் ஆர்வம் பாராட்டுக்குரியது. ஜெய் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணிக்கு என் வாழ்த்துகள்.”

 நடிகர் சமுத்திரக்கனி: “கொடுக்கும் குணம் கொண்ட மனிதர்!”

“நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் திரையுலகமே திரண்டு வந்திருக்கும் ஒரு பூஜை இது. அண்மைக்காலமாக விழாக்கள் சுருங்கிவிட்டன, ஆனால் கண்ணன் ரவி வீட்டு விசேஷம் போல எல்லாரும் வந்திருக்கிறார்கள்.

நேற்று அவருடன் பயணித்தபோது அவர் ஒரு விஷயம் சொன்னார்: ‘நான் நிறைய சம்பாதிக்கிறேன், அதில் ஒரு பகுதியை மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகவே தனியாக எடுத்து வைத்துவிடுவேன்’ என்றார். அந்த ஒரு நல்ல மனதிற்காகவே அவர் இன்னும் நூற்றுக்கணக்கான படங்களைத் தயாரிக்க வேண்டும்.”

  நடிகர் ஜெய்: “என் வளர்ச்சிக்காகக் காத்திருந்த தயாரிப்பாளர்!”

“இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என் மேல் வைத்த நம்பிக்கைக்குப் பெரிய நன்றி. கண்ணன் ரவி அவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்தேன். அப்போது அவர் படம் பண்ணலாம் என்று கேட்டபோது, நான் இருந்த சூழ்நிலையில் ‘ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்?’ என்று அதைத் தவிர்த்தேன்.

ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் சந்தித்தபோது, ‘நான் கொஞ்சம் வளர்ந்த பிறகு உங்களுடன் இணைகிறேன்’ என்று சொன்னேன். ஆனால் அவரோ, ‘உனக்கான வளர்ச்சி என் படத்தின் மூலமே கிடைக்கட்டும்’ என்று சொல்லி எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார். அவரின் அந்தப் பெரிய மனதிற்காகவே என் முழு உழைப்பையும் இந்தப் படத்திற்குக் கொடுப்பேன்.”

  நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு : “தயாரிப்பாளர் கண்ணன் ரவி ஒரு மிகச்சிறந்த நண்பர். அவருடைய விருந்தோம்பல் மனதிற்குப் பிடிக்கும். ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. கதை மற்றும் என் கதாபாத்திரம் மிக வலுவாக அமைந்துள்ளது.”

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியதன் விரிவான தொகுப்பு:

“இந்த இனிய காலை வேளையில், எங்களின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்திருக்கும் திரையுலகச் சான்றோர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், பெரியோர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு மிகச்சிறந்த மற்றும் நேர்மறையான தொடக்கம் (Good Start).

ஒரு இயக்குநராக என் மீதும், கதையை நம்பி என்னுடைய ஒட்டுமொத்தப் படக்குழுவினர் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் திரு. கண்ணன் ரவி அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு படைப்பாளியின் கற்பனைக்கு உயிர் கொடுக்க, அதை நம்பி முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது மிகப்பெரிய வரம். அந்த வகையில் கண்ணன் ரவி சார் எங்களுக்கான மிகப்பெரிய தூணாக இருக்கிறார்.

இந்தப் படத்தில் என்னுடன் கைகோர்த்திருக்கும் நடிகர் ஜெய், நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் அனைத்து நட்சத்திரங்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்தப் படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் வெற்றிக்காக நாங்கள் அனைவரும் ஒரு குழுவாக, மிகுந்த நம்பிக்கையுடனும் முழு அர்ப்பணிப்புடனும் உழைக்கத் தயாராக இருக்கிறோம். உங்களின் அன்பும் ஆதரவும் என்றும் எங்களுக்குத் தேவை.”

Related Posts